பணம் படைத்தவன்

சுருக்கம்:
2008-இல் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை கண்டது. பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்தது மட்டும் இன்றி, பங்குச் சந்தையும் சரிந்தது. அதிக அளவில் பொது மக்கள் தங்களது ஒய்வு  காலத்திற்க்காக சேர்த்து வைத்திருந்த சேமிப்புகள், பங்கு சந்தையில் இருந்ததால் (401(கெ)ஐ.ஆர்.ஏ), இது இரட்டிப்பு சுமையாக அமைந்தது. அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா மிக சாதூர்யத்துடன் செயல் பட்டதால் அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக சரியாமல் சில வருடங்களுக்குள் சுதாரித்துக் கொண்டது. நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதைக்கு வந்து விட்டாலும் பொது மக்களுக்கு முக்கியமான வேலை வாய்ப்பு மிகவும் நலிந்தது. இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் பெரிய வங்கிகள் (வணிக மற்றும் முதலீட்டு). அவர்கள் மற்ற மக்களுடைய பணத்தை கையாண்டதன் விளைவு தான் 2008 அமெரிக்கா (மற்றும் உலக) பொருளாதாரத்தின் சரிவுக்கு காரணம். ஆனால் ஒபாமாவின் நிர்வாகத்தில், வங்கிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதில் முக்கிய பதவியாளர்கள் அந்த வங்கிகளுக்கு உறுதுணையாக நின்றனர்.

இந்த புத்தகத்தில் நொமி பிரின்ஸ் 1900-இல் இருந்து இன்று வரை அமெரிக்க நிர்வாகம் ( டெமொக்ராட்ஸ் மற்றும் ரிபப்ளிகன்ஸ்) எத்தகைய அளவுக்கு வங்கிகளின் பிணையில் அகப்பட்டுள்ளது என்பதை நிறைய விவரங்களோடு எழுதி இருக்கிறார். ஜனாதிபதிப் பதவியின் வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் வங்கிகளின் கொட்டத்தை அடக்குவதாக மக்களுக்கு வாக்களித்தாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே வங்கிகளின் பிணைக் கைதிகளாக ஆகிவிடுகின்றனர்.

அலசல்:
இந்த புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பத்து வருட காலத்தை ஆராய்கிறது. முகவுரையில் 1900-இல் ஆரம்பித்து இன்று வரை அமெரிக்காவின் பொருளாதாரத்தை கவர்கிறது. வரலாற்றில் 1898-இல் நடந்த ஸ்பானிஷ் அமெரிக்கன் போருக்கு பிறகு அமெரிக்கா வளர்ந்த நாடுகளுடன் சரி சமமாக கருதப்படுவதால் இந்த புத்தகம் 1900-இல் இருந்து தொடங்குகிறது.

1900 - 1910: 1907-இல் அமெரிக்காவின் ரெயில் நிறுவனங்கள் நாட்டின் ரெயில் உள்கட்டமைப்பை உருவாக்க வங்கிகள் இடமிருந்து நிறைய கடன் வாங்கியிருந்தன. நிக்கர்பாக்கர் டிரஸ்ட் கம்பெனி என்னும் நிறுவனம் நிறைய சிறு வங்கிகள் மூலமாக ரெயில் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் நிதி திரட்டியிருந்தது. அவ்வாறு திரட்டிய நிதியை செம்பு உலோகத்தில் உள்ள சந்தையை தவறாக ஆதிக்கம் செய்ய முற்பட்டதால் அந்த நிறுவனத்தின் நிதியை அதன் வைப்புதாரர்கள் தங்களுக்குக் கோரினர். அந்த காலத்தில் பிரிட்டனின் நாணயமான பவுண்டு ஸ்டேர்லிங்க் மூலம் உலக வணிகம் நடத்தப்பட்டது. பிரிட்டன் மற்றும் மத்த ஐரோப்பிய வங்கிகள் நீண்ட காலம் இந்த வியாபாரத்தில் இருந்ததால் அங்குள்ள வங்கிகள் இழப்புகளை சரி கட்ட அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகள் இருந்தன. முன்பு, 1899-இல் இது போன்று அமெரிக்க அரசால் 50 மில்லியன் டாலர் திறட்ட முடியாமல் போன போது மார்கன் வங்கியின் உரிமையாளர் ஜெ.பி.மார்கன் தனது வங்கியின் செல்வாக்கை பயன் படுத்தி அமெரிக்க அரசுக்கு 50 மில்லியன் டாலர் கடன் அளித்தார். 1907-இல், அமெரிக்காவின் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் 1902 தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை தேர்ந்தெடுத்தால் அமெரிக்க மக்களின் பணத்தை சூறையாடும் வங்கிகளின் கொட்டத்தை அடக்குவதாக வாக்களித்து பதவிக்கு வந்திருந்தார். 1902-இல் ஜனாதிபதி ஆகிய பிறகு கொடுத்த வாக்கிற்கேற்ப நிதி திரட்டிய டிரஸ்ட் நிறுவனங்களின் மீது 1890-இல் காங்கிரஸ் செயல்படுத்திய ஷெர்மன் ஆன்டி டிரஸ்ட் திட்டத்தை ஏவினார். இதனால் அமெரிக்காவின் வங்கி உரிமையாளர்கள் அவரை தங்களுக்கு சாதகமாக நினைக்கவில்லை. ஆனால், 1907-இல் அமெரிக்க பொருளாதாரத்தில் இருந்த பீதியை அடக்க வேற வழியின்றி ருஸ்வெல்ட் மார்கன் மற்றும் பெரிய வங்கி உரிமையாளர்களின் உதவியை நாட வேண்டி வந்தது.

1910 - 1920:1912-இல் டெமொக்ராட் கட்சியின் வேட்பாளர் வுட்ரொ வில்ஸன்  ஜனாதிபதி ஆனார். ரூஸ்வெல்ட் போல், தனது தேர்தல் பிரச்சாரத்தில் வங்கிகளின் கொட்டத்தை அடக்குவதாக உறுதி அளித்தார். 1907-இல் நிகழ்ந்த பீதி மீண்டும் தலையெடுக்காமல் இருக்க, அமெரிக்காவின் வங்கி உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக அரசிடம் இருந்து உதவி பெறுவதற்கு ஃபெடெரல் ரீசர்வ் வங்கி உருவாக்கத்தை காங்கிரஸ் மூலம் செயல்படுத்தினர். முதலில் அதற்கு இணங்காத வில்ஸன் பின்னர் வங்கி உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகு அந்த மசோதாவிற்கு தன்னுடைய இணக்கத்தை அளித்தார். அதற்குப்பின், ரூஸ்வெல்ட் ஆட்சியில் பரவலாக பயன்படுத்தப் பட்ட ஷெர்மன் ஆன்டி டிரஸ்ட் திட்டத்தை வில்ஸன் வங்கிகள் மீது பயன்படுத்தவில்லை. 1914-இல் இருந்து ஆரம்பித்த முதலாம் உலகப் போரில் அமெரிக்கா முதலில் பங்கு கொள்ளாமல் இருந்தது. ஆனால் அமெரிக்காவின் வங்கிகள் போரில் ஆழ்ந்திருந்த நாடுகளுக்கு கடன் கொடுத்து உதவின. மேலும், போர் விளைவினால் ஐரோப்பாவின் வங்கிகள் உலகின் மற்ற நாடுகளுக்கு நிதி உதவி செய்ய முடியாத நிலையை அமெரிக்காவின் வங்கிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டன. 1917-இல் ஜெர்மனியின் யு படகுகள்  அமெரிக்காவின் 5 வணிகக் கப்பல்களை அட்லான்டிக் கடலில் மூழ்கடித்ததால், வில்ஸன் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் பக்கமும், ஜெர்மனி மற்றும் ஆஸ்ட்றியா-விற்கு எதிராகவும் போரில் இறங்க முடிவு செய்தார். 1918-இல் நடந்த அமெரிக்க தேர்தலில் வில்ஸன் மீண்டும் வெற்றி பெற்றார். 1919-இல் முதலாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர பாரிஸ்-இல் சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கின. வில்ஸன் அமெரிக்காவின் பங்குக்கு 'பதினான்கு புள்ளிகள்'  என்ற பெயரில் சமாதான பேச்சு வார்த்தைக்கான கட்டமைப்பை அறிவித்தார். ஆனால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் பேச்சு வார்த்தை மூலம் ஜெர்மனி மற்றும் ஆஸ்ட்ரியா-வை தண்டிக்கும் நோக்கோடு இருந்ததால் வில்ஸன்-இன் முயற்சி வீண் போனது. வில்ஸன்-இன் மற்றுமொறு யோசனையான லீக் ஆஃப் நேஷன்ஸ்-க்கும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்-இடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தன்னுடைய யோசனைகளை செயலாற்றும் முன், வில்ஸன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். 1920-இல் நடந்த தேர்தலில், வில்ஸன்-இன் யோசனைகளை செயல்படுத்துவதாக கூறி பிரச்சாரம் செய்த டெமொக்ராட் கட்சியின் வேட்பாளர்களான ஜேம்ஸ் காக்ஸ்-உம் ஃப்ராங்க்ளின் டெலனோ ருஸ்வெல்ட்-உம் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர்களான வாரன் ஹார்டிங்க் மற்றும் கேல்வின் கூலிட்ஜ்  அணியிடம் தோல்வி அடைந்தனர். அதனால், வில்ஸன்-இன் பதினான்கு புள்ளிகள் மற்றும் லீக் ஆஃப் நேஷன்ஸ் யோசனைகளுக்கு ஆதரவு குறைந்தது. அதனுடைய பின் விளைவு, வெர்ஸாய் ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டன்-உம் பிரான்ஸ்-உம் ஜெர்மனி-இன் மீது முதலாம் உலகப் போரில் தோற்றதற்காக மிகுந்த நஷ்ட ஈடு விதித்தனர்.

1920 - 1930: முதலாம் உலகப் போர் நிறைவடைந்த பிறகு அமெரிக்காவின் பொருளாதாரம் மெதுவாக சீரடைய ஆரம்பித்தது. போர் நிதிக்காக ஒதுக்கப் பட்ட வங்கிகளின் கடன் அமெரிக்க மக்கள் நோக்கி பாய்ந்தன. ரிபப்ளிகன் கட்சியின் ஆட்சியில் மக்கள் மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டது. கடன் கொடுப்பதில் இருந்த தடைகளும் வரை முறைகளும் பெரும்பாலும் விலக்கப் பட்டன. இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. 1928 தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் ஹெர்பர்ட் ஹூவர்  அமெரிக்க ஜனாதிபதி ஆனார். தனது கருவூலச் செயலாளராக  ஆன்ட்ரூ மெல்லன்-ஐ நியமனம் செய்தார். அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சியின் பெரும் பகுதி மக்கள் வாங்கிய கடன் மூலமாக ஏற்பட்டது. 1920-களில் பெரிய வங்கிகளான மார்கன், சேஸ் மற்றும் நேஷனல் சிடி வங்கி (இன்றைய சிடி வங்கி)  இந்த கடன்களை உருவாக்கினர். நேஷனல் சிடி வங்கி பொது மக்களின் வைப்புகள் மற்றும் முதலீட்டுகள் மூலம் பெரிய வங்கியாக ஆனது. சேஸ் மற்றும் நேஷனல் சிடி வங்கியின் வளர்ச்சியை கண்டு மார்கன் வங்கியும் பொது மக்களின் வைப்புகள் மற்றும் முதலீட்டுகள் மூலம் தனது நிதி வருவாயை வளர்த்திக் கொண்டது. அதே நேரத்தில், இந்த மூன்று வங்கிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய சொந்தக் கணக்கிலும் கடன் வாங்கிக் கொண்டனர். இவ்வாறு தங்களது சொந்தக் கணக்குக்கு வாங்கியதன் மூலம், வங்கிகளின்  பங்கு விலையை ஏற்றி விட்டனர். பொது மக்களிடையே வங்கிகளின் பங்குகள் வாங்குவதற்கான  தேவை அதிகரித்தவுடன், அந்த பங்குகளை அதிக விலையில் பங்குச் சந்தையில் விற்று லாபத்தை சம்பாதித்துக் கொண்டனர். வங்கிகள் கொடுத்த கடன்களின் உண்மையான நிலை அறிந்தவுடன், மக்கள் வங்கிகளின் பங்குகளை விற்க முயன்றனர். ஆனால், அதே நேரத்தில் மற்றவர்களும் விற்க முயன்றதால், பங்குச் சந்தை மிகப் பெரியச் சரிவைக் கண்டது. அதன் விளைவாக, அமெரிக்காவின் பொருளாதாரம் டிப்ரெஷன்   நிலைக்குத் தள்ளப்பட்டது. அதே கால கட்டத்தில், ஐரோப்பா-வில் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு உதவி செய்ய  பெங்க் ஆஃப் இன்டெர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் (பி.ஐ.ஸ்)-ஐ 1930-இல் அமெரிக்க வங்கிகள் உருவாக்கின.

1930 - 1940: அமெரிக்காவில் தொடங்கிய  பொருளாதார டிப்ரெஷன்  உலகம் முழுவதும் பரவியது. முதலாம் உலக போரினால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்-இன் வங்கிகள் திடகாத்திரமான நிலையில் இல்லை. ஜெர்மனியின் அரசு போரின் விளைவினால் கடன் சுமையை குறைக்க சலுகைகளை விரும்பியது. இந்த முறை, பிரிட்டன்-உம் பிரான்ஸ்-உம் அதற்கு ஒத்துக் கொண்டன. ஆனால், அந்தச் சலுகைகள் செயல்பாட்டில் வருவதற்குள், ஜெர்மனியின் பண வீக்கம் மிகவும் மோசமாகியது (ஹைபெர் இன்ஃப்லெஷன்). அமெரிக்காவின் கரூவூலச் செயலாளர்-ஆக இருந்த மெல்லன் வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக அந்த பதவியில் இருந்து நீக்கப் பட்டார். டிப்ரெஷன் தீவிரமாக இருந்ததினால் 1932 தேர்தலில் ஜனாதிபதி ஹூவர் டெமொக்ராட் கட்சியின்  ஃப்ராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட்  -இடம் (ஃப்.டி.ஆர்) தோற்றார். ஃப்.டி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் இயக்கிய செயல்பாட்டுகளால் டிப்ரெஷன் நிலமை குறைந்து அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டும் தலை நிமிர்ந்தது. அவரது ஆட்சியில் பொது மக்களுடைய பன வைப்பை பாதுகாக்க வங்கிகளில் கூட்டாட்சி வைப்பு காப்பீட்டு திட்டம்  (ஃபெடெரல் டெபாசிட் இன்ஷுரன்ஸ்), விவசாயிகளுக்கு விலை சரிவினால் ஏற்படும் இழப்பைக் கட்டுப்படுத்த விவசாய சரிசெய்தல் திட்டம் (அக்ரிகல்சுரல் அட்ஜஸ்ட்மென்ட் ஆக்ட்), வேலை வாய்ப்பு அளிக்க வேலை முன்னேற்ற நிர்வாகம்  (வேர்க்ஸ் பிராக்ரஸ் அட்மினிஸ்டெரெஷன்), ஓய்வு காலத்தில் பண உதவிக்கு சோஷியல் செக்யூரிடி அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். முந்தைய ஹூவர் ஆட்சியில் வங்கிகள் வைப்புகளையும் முதலீட்டுகளையும் தனித்தனியாக வைக்க அமல்படுத்தப்பட்ட க்ளாஸ் ஸ்டீகல் திட்டத்தை மேலும் வலுப்படுத்தினார். 1936-இல் நடந்ததேர்தலில் ஃப்.டி.ஆர் மீண்டும் வென்றார். ஐரோப்பா-வில் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாகி அண்டை நாடுகளை முற்றுகையிட்டு வென்றார். அமெரிக்க பொருளாதாரம் மெதுவாக வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஃப்.டி.ஆர் ஐரோப்பா-வில் நடப்பதை கண்காணித்துக் கொண்டிருந்தார். செப்டெம்பர் 1939-இல் பிரிட்டன் ஜெர்மனியின் மீது போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பம் ஆனது.

1940 - 1950: அமெரிக்காவில் ஜெர்மனி மற்றும் இதாலி-க்கு ஆதரவாக சிலர் இருந்தாலும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்-க்கு சாதகமாக இருப்பவர்களின் கையே ஓங்கியிருந்தது. மேலும், அமெரிக்க வங்கிகள் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்-இல் உள்ள வங்கிகளிடம் இணைந்து வேலை செய்ததால், பண பலம் அவற்றின் பக்கமே இருந்தது. 1940-இல் நடந்த தேர்தலில் ஃப்.டி.ஆர் மூன்றாம் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆனார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் ஜுலை 1944-இல் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தில் ப்ரெட்டன் வுட்ஸ் என்ற இடத்தில் போர் முடிந்த பின் உலகின் பொருளாதார நிலைமையை ஆராய கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க,    சர்வதேச பண நிதி (ஐ.எம்.ஃப்) மற்றும்  மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி (உலக வங்கி)-உம் நிறுவப்பட்டன. மேலும், இந்த மாநாட்டிற்குப்  பின், அமெரிக்கா உலகின் மேலோங்கிய நாடாக வலம் வந்தது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்-உம் இரண்டு உலக போரின் விளைவாக (உடல் மற்றும் மன அளவில்) தங்களது முதன்மை இடத்தை அமெரிக்கா-விடம் இழந்தன. ஏப்ரல் 1945-இல் ஃப்.டி.ஆர் மரணம் அடைந்தார். அவருக்குப் பின் டெமொக்ராட் கட்சியில் இருந்து ஹாரி ட்ரூமன்  அமெரிக்க ஜனாதிபதி ஆனார். மே 1945-இல் இரண்டாம் உலக போர் முடிவதற்கான ஒப்பந்தம் கை எழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின் அமெரிக்காவின் வங்கிகளின் வலிமை பன்மடங்காக உயர்ந்ததனால், அவர்களின் மூலம் ஐரோப்பா மற்றும் ஜப்பான்-இன் பொருளாதாரத்தை நிலைப்படுத்த  மார்ஷல் திட்டம் செயல் படுத்தப்பட்டது. 1948-இல் நடந்த தேர்தலில் ஹாரி ட்ரூமன் மீண்டும் ஜனாதிபதி ஆனார்.

1950 - 1960: 1950-இலிருந்து அமெரிக்காவின் எதிரியாக சோவியத் யூனியன் உருவெடுத்தது. அமெரிக்காவில் கேபிடலிஸமும் சோவியத் யூனியனில் கம்யூனிஸமும் இருந்ததால் அமெரிக்க வங்கிகள் தங்களது வளர்ச்சி தேச வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்பினர். அதனால், ஆசியா, ஆஃப்ரிகா, தெற்கு அமெரிக்கக் கண்டங்களில் தங்களது வங்கி கிளைகளை திறந்தனர். அந்த கண்டங்களில் தங்களுக்கு சாதகமான நாடுகளுக்கு மலிய வட்டிக்கு கடன் அளித்தனர். சோவியத் யூனியனும் அதற்கு சாதகமான நாடுகளுக்கு மலிய வட்டிக்கு கடன் கொடுத்து உதவியது. 1952 மற்றும் 1956-இல் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் ட்வைட் ஐஸஹோவர்  தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதி ஆனார். இரண்டாம் உலகப் போருக்காக விதித்திருந்த மக்கள் மீதும் வங்கிகள் மீதும் இருந்த வரி அளவினை அவர் குறைத்தார்.

1960 - 1970: 1960-இல் நடந்த தேர்தலில் டெமொக்ராட்  ஜான் ஃப் கென்னெடி  அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அவரது ஆட்சி காலத்தில் வெளி நாட்டு விவகாரங்கள் மேலோங்கி இருந்தன. 1963-இல் அவர் இறந்த பிறகு டெமொக்ராட் கட்சியில் இருந்த  லிண்டன் ஜான்ஸன் ஜனாதிபதி ஆக அறிவிக்கப்பட்டார். 1964-இல் நடந்த தேர்தலில் ஜான்ஸன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான்ஸனின் பதவிக் காலத்தில் அமெரிக்கா வியட்னாம் போரில் ஆழ்ந்திருந்ததால் அவரது கவனம் முழுவதும் அதில் சென்றது. ஜான்ஸன் தலைமையில்  வறுமையை ஒழிக்க  மெடிக்கேர் மற்றும் மெடிக்கேய்ட்  அரசு திட்டங்களை செயல்படுத்தினார். 1968-இல் நடந்த தேர்தலில் வியட்நாம் போர்-இன் விளைவாக ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர்  ரிச்சர்ட் நிக்ஸன்  வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் வியட்நாம் போர் நிறைவுக்கு வந்தது.

1970 - 1980: 1900 முதல் வங்கி உரிமையாளர்கள் பணம் (வங்கிகளிலும் தனிப்பட்ட முறையிலும்) சேர்ப்பதில் குறியாக இருந்தாலும் பொது நலனைக் கருதி தங்களது நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். வியட்நாம் போரினால் அமெரிக்க சமுதாயத்தின் ஏற்பட்ட கொந்தளிப்பினாலும் நடு கிழக்கு பிராந்தியத்தில் அமைந்திருந்த எண்ணை எரிவாயு வளங்களை பயன்படுத்துவதில் உள்ள வருவாயினாலும் வங்கிகள் பொது நலனில் உள்ள ஆர்வத்தை குறைத்துக் கொண்டே வந்தனர். 1944-இல் நடந்த ப்ரட்டன் வுட்ஸ் மாநாட்டில் உலகில் உள்ள இதர நாடுகள் அமெரிக்க டாலரை இருப்பு நாணயமாக ஏற்றுக் கொள்ள டாலர்-இன் மதிப்பு தங்கத்தோடு
இணைக்கப்பட்டது. 1920 மற்றும் 1930-களில் எல்லா நாடுகளின் நாணயங்களின் மதிப்பு தங்கத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது. ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்புக்குத் தக்க தங்க நாணயத்தை மற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. உலகின் தங்க இருப்புகள் வரையிறுக்கப்பட்ட அளவில் இருந்ததனால், இந்த இணைப்பின் காரணமாக 1929-இல் நிகழ்ந்த டிப்ரெஷன் கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நாட்கள்  பல நாடுகளின் பொருளாதாரங்களை சேதம் செய்தது. 1971-இல் அமெரிக்காவின் பங்குச் சந்தை சரிய ஆரம்பித்த பொழுது அயல் நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகள் மற்றும் பத்திரத்தின் மதிப்பிற்கு சமமான தங்கத்தைக் கோரினர் (ஒரு அவுன்ஸ் தங்கம் - $35). இதனை அடுத்து, நிக்ஸன் டாலருக்கும் தங்கத்துக்கும் உள்ள இணைப்பை துண்டித்தார். டாலரின் மதிப்பை தங்கத்தோடு இணைக்காததால் கடன் வாங்குவது மிக்க எளிதானது.  இரண்டாம் முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 1974-இல் நிக்ஸன் டெமொக்ராட் நேஷனல் கமிட்டி தலைமைச் செயலகத்தில் திருடியவர்களுடன் அவரது தேர்தல் கமிட்டிக்குத் தொடர்பு இருந்ததால், அவர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அவருக்குப் பின், ரிபப்ளிகன் கட்சியின்  ஜெரல்ட் ஃபொர்ட்  அமெரிக்க ஜனாதிபதி ஆனார். 1976-இல் நடந்த தேர்தலில் டெமொக்ராட்  ஜிம்மி கார்டர்-இடம் தோற்றார். அமெரிக்க பொருளாதாரம் வீக்கமடைந்த நிலையில் டாலரின் பண வீக்கமும் கூடிக்கொண்டே போனது.

1980 - 1990: 1980-இல் நடந்த தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் ரானல்ட் ரேகன்  ஜனாதிபதி ஆனார். அவரது நிர்வாகத்தில் பொருளாதாரக் கொள்கையான  இலவசச் சந்தை (ஃப்ரீ மார்க்கெட்) மேலோங்கி இருந்தது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வணிகச் சந்தையில் உள்ளவர்கள் சொந்த ஆர்வத்தினால் (செல்ஃப் இன்டரஸ்ட்) நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும் என்பதும் அரசு அதில் தலையிட்டால் பொருளாதார வளர்ச்சி குறைந்து பொருளாதாரத்தின் அடிப்படைக் கலப்படமாகி விடும் என்பதும்  அந்த கொள்கையின் அடித்தளம் ஆகும். பொருளாதார வரலாற்றில் அந்த கொள்கை நல்லதாகச் செயல்பட்டதேயில்லை என்ற ஆதாரம் வெகுவாக இருந்தாலும் அது ரிபப்ளிகன் கட்சியின் சித்தாந்தமாக இருந்ததனாலும் மக்களுக்கு எளிதில் புரியக் கூடியதாக இருந்ததாலும் ரேகன் ஆட்சியில் அந்தக் கொள்கை அமெரிக்க நிர்வாகம் எங்கும் பரவியது. இரு கட்சிகளும் தங்களது கட்சி நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி திரட்ட வணிகர்களை நம்பியிருந்ததால்  வணிகர்களுடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிபணிந்து செல்ல வேண்டியிருந்தது. அதன் விளைவாக, அமெரிக்காவில் மக்கள் செலுத்தும் வரி குறைக்கப்பட்டது. சில வருடங்களுக்குப் பின், அரசின் வருமானம் குறைந்ததால், வரி மீண்டும் ஏற்றப்பட்டது. ரேகன் நிர்வாகத்தில் கருவூல செயலாளராக முதலீட்டு வங்கியான மெரில் லின்ச்-இன் உரிமையாளர்  டானல்ட் ரிகன் நியமிக்கப்பட்டார். அமெரிக்க வங்கிகளின் செல்வாக்கு ஓங்கி இருந்ததால் நிதி மற்றும் கடன் அளிப்பதை சீராக்க இருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டன. வறுமை நாடுகளுக்கு அமெரிக்க வங்கிகள் தரம் பார்க்காமல் கடன் கொடுத்ததால் வங்கிகளின் நிதி நலன் கெட்டுப் போனது. ரேகனின் நிர்வாகம் வங்கிகளை காப்பாற்ற அந்த வங்கிகளின் கடன்களுக்கு உத்தரவாதம் அளித்தது. வருங்காலத்தில் வங்கிகள் தன்னிலை அறியாமல் கடன் கொடுத்து அவற்றை மீட்க முடியாமல் நஷ்டம் அடைவதும் வங்கிகளை காக்க அமெரிக்க நிர்வாகம் வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதும் இதில் இருந்து தான் ஆரம்பித்தது.
வேர்ல்ட் பேங்க்-உம் ஐ.ம்.ஃப்-உம் நலிந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு நிதி உதவி செய்ய அமெரிக்க நிர்வாகம் அமெரிக்க வங்கிகளை நியமித்தது. இலவச சந்தை கொள்கைகளால் வங்கிகள் அளித்த கடன் மற்றும் பத்திரங்களின் குறைந்த மதிப்பால் அக்டோபர் 1987-இல் பங்குச் சந்தை மீண்டும் சரிவு கண்டது. 1989-இல் நடந்த தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் ஹெச் டபுள்யூ புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். வங்கிகளின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு மாறாக அவற்றிற்கு விதித்திருந்த சட்டங்களை மேலும் தளர்த்தினார்.

1990 - 2000: 1992 தேர்தலில் டெமொக்ராட் கட்சியின் வேட்பாளர் பில் கிளிண்டன் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வங்கிகளை வில்லனை போல் பாவித்தாலும் பதவிக்கு வந்தவுடன்  அதே வங்கிகளுக்குச் சாதகமாக செயல்பட்டார். கிளிண்டன் ஆட்சி காலத்தில் மெக்ஸிகோ, கிழக்கு ஆசியா மற்றும் ரஷ்ய பிராந்தியங்களில் நாணய நெருக்கடியில் சிக்கித் திளைத்த பொழுது அந்த நாடுகளுக்கு உதவி அளிக்காமல் அவர் அமெரிக்க வங்கிகளின் பக்கம் உறுதுணையாக நின்றார். கிளிண்டன் ஆட்சி காலத்தில் 1929-இல் செயல்படுத்தப்பட்ட க்ளாஸ் ஸ்டிகல் திட்டம் ஒரேயடியாக அழிக்கப்பட்டது. அதன் விளைவு ஒரே வங்கியின் மூலம் வைப்பும் முதலீட்டும் அளிக்கும் நிலை உருவாகியது. இதனால், வங்கிகளின் பங்குச் சந்தை மதிப்பு பன் மடங்கு உயர்ந்தது.

2000 - 2010: 2000-இல் நடந்த தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்  அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அவரது நிர்வாகத்தில் கடனும் பங்குகளும் பத்திர விற்பனையும் மேலும் மேலும் வளர்ந்தன. வங்கிகள், கடன் அளிப்பது மட்டுமின்றி மக்களுடைய அடமானச் சொத்துகளை மூலாதாரமாக வைத்து பல வழித்தோன்றல்களை   (டெரிவேடிவ்ஸ்) உருவாக்கி அதில் லாபம் செய்தனர். இந்த வழித்தோன்றல்களின் மதிப்பு உலகமெங்கும் பரவி பல பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்தது. 2008-இல் நிகழ்ந்த சரிவுக்கு (ரிசெஷன்) இவற்றின் குறைகின்ற மதிப்பே காரணமாகியது. 2008-இல் ஆரம்பித்த சரிவைக் கட்டுபடுத்த ஓபாமா-வின் தலைமையில் 700 பில்லியன் டாலர் மதிப்பில் பிரச்சினை உள்ள  சொத்து நிவாரண திட்டம் (ட்.ஆ.ர்.ப்)  செயல்படுத்தப்பட்டது.

2010 - :அமெரிக்காவின் பொருளாதாரம் மெதுவாக மீண்டு கொண்டிருந்த   நேரத்தில் 2012-இல் நடந்த தேர்தலில் ஓபாமா மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தில் வங்கிகளை விரோதியாக பாவித்தாலும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ற தண்டனை இல்லாமல் போயிற்று.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்ற குறிப்புகள்:
தி ராப்பர் பேரன்ஸ் - மாத்யூ ஜோஸப்ஸன்



Copyright © 2017 Kunthavaiyin Kaathalan

No comments: