மதவெறியின் பலன் - அமெரிக்கப் பதிப்பு

சுருக்கம்:
அபோக்கலிப்டோப் படத்தின் இறுதியில், படத்தின் கதாநாயகன் (மாயாப் பழங்குடி இனத்தவன்) அஸ்டெக்ஸ்-இடம் இருந்துத் தப்பியவுடன் அவனது குடும்பத்துடன், ஸ்பெய்ன் நாட்டின் காண்க்வீஸ்டடோர் கடற்கரையில் வந்து இறங்கியதைப் பார்த்து விட்டு,  அடர்ந்தக் காட்டுக்குள் செல்கிறான். அந்தப் படத்தின் இயக்குனர், மெல் கிப்ஸன் மதமும் வன்முறையும் ஒன்றையொன்றுச் சந்திக்கின்ற சூழ்நிலைகளைப் பயங்கரமாகச் சித்தரிப்பதில் கைத் தேர்ந்தவர். அந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தப் படத்தில், அஸ்டெக் மக்களின் மதப் பழக்க வழக்கங்கள், அங்குள்ள மன்னர்களின் கருவிகளாகப் பயன்பட்டன என்றுக் காட்டி விட்டு, காண்க்வீஸ்டடோரின் மதப் பழக்க வழக்கங்களை அவர்களுடையப் பக்தியின் வெளிப்பாட்டாகக் காட்டியிருக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்தப் பின், அஸ்டெக்களின் ராஜ்யம் காண்க்வீஸ்டடோர்களின் கைகளில் அழிந்ததை ஒருதலைப்பட்சமாகத் தான் காண முடியும்.  இந்தப் புத்தகத்தில், கோர்டெஸ் தலைமையில் காண்க்வீஸ்டடோர்கள் தங்களது இறுதி இலக்குகளான, அஸ்டெக் இராஜ்யத்தின் தங்கச் சுரங்ககளைச் சூறையாடுவதையும் மற்றும் அங்குள்ள மக்களைக் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவதையும் நன்றாக எழுதியிருக்கிறார். கற்பனைக் கதை அல்லாமல் வரலாற்றுப் புத்தகம் தான் என்றாலும், படிப்பதற்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது.
1519-இல் இருந்து 1521-இற்குள், கோர்டெஸ் தனது மதவெறி, சூது, கபடம் மற்றும் இராஜத்தந்திரங்களைப் பயன்படுத்தி, அஸ்டெக் இராஜ்யத்தை அழித்தது மட்டுமல்லாமல் அவர்களதுப் பழக்க வழக்கங்களையும் வேரோடுத் தூக்கி எறிந்தார். அஸ்டெக் இராஜ்யத்தின் மன்னான மான்டெஸூமாவின் மேல் ஆத்திரம் கொண்ட அஸ்டெக் குறு நில மன்னர்கள், கோர்டெஸின் முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்றனர்.
அஸ்டெக் நாகரீகத்தின் மையமான டெனொச்டிட்லன்-ஐ கைப்பற்ற நடந்தச் சண்டை, இன்று வரையிலும், உலக வரலாற்றில் நடத்தப்பட்டச் சண்டைகளில்  நீண்டது என்றச் சாதனை மட்டுமின்றி, நிறைய மக்கள் (கிட்டத்தட்ட 200,000 பேர்) மடிந்தச் சண்டையாகவும் விளங்குகிறது.  கோர்டெஸிடம் எப்படியாவது அமைதியானத் தீர்வுக் காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு மான்டெஸுமா தோன்றுகிறார். கோர்டெஸ்,
மான்டெஸுமாவிடம் மிகவும் தெள்ளத் தெளிவாக தனதுப் படையின் குறிக்கோளைச் சொல்கிறார் - 'நானும் எனது நாட்டைச் சார்ந்தவர்களும், தங்கத்தினால் மட்டுமேச் சரிச் செய்யக் கூடிய இதய நோயினால் அவதிப்படுகிறோம்'. கோர்டெஸின் உள்நோக்கத்தைத் தவறாகக்
கணித்ததன் வினையாக, அஸ்டெக் இராஜ்யம், மான்டெஸுமாவிற்குப் பின் வந்த மன்னர்கள் எவ்வளவு எதிர்த்தும், அழிவடைகிறது. காண்க்வீஸ்டடோர்களுடன் வந்திருந்த துப்பாக்கிகளையும் குதிரைகளையும் அதற்கு முன் பார்த்திராததால், அஸ்டெக் வீரர்கள் மிரண்டு போய், போர்களில் தோல்வியுற்றனர். இறுதியில், கோர்டெஸ் மற்றும் காண்க்வீஸ்டடோர்களை எதிர்க்க நேர்த்தியான மூலோபாயம் வகுக்கும் பொழுது, காண்க்வீஸ்டடோர்கள் வந்த கப்பல்களில் அவர்களுடன் உடன் வந்த பெரியம்மை வியாதி, அந்த முயற்சிகளைப் பயனற்றதாக்குகிறது. இன்றையக் கால மெக்ஸிகோ நாட்டின் மெஸ்டிஸோ எனப்படும் கலப்பு இனப்பெருக்கல், கோர்டெஸ், அஸ்டெக் இராஜ்யத்தைத் தனதுக் கட்டுக்குள் கொண்டு வரப் பயன்படுத்திய அணுகுமுறையின் விளைவாக உருவானது. ஐரோப்பிய மற்றும் அஸ்டெக் மக்களின் இரத்த மற்றும் கலாச்சாரக் கலவை, ஐரோப்பியர்கள் பக்கம் வெகுவாகச் சாய்ந்து இருப்பதால், மெக்ஸிகோ மக்கள் தங்களதுப் பூர்வீக வரலாற்றை நேர்மையாக எதிர்கொள்ளும் முயற்சிகள் கடினமாக இருக்கின்றன.
இந்தப் புத்தகத்தைப் படித்ததில், இந்தியாவில் மதப் பயங்கரவாதத்தை ஐரோப்பியர்களில் முதலில் செய்தது, ஸ்பெய்ன் நாட்டினர் அன்றி போர்த்துகீசியர்கள் தான் என்பதில் ஒருச் சின்னச் சந்தோஷம் கிடைக்கிறது. ஸ்பெய்ன் நாட்டு வீரர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் மதவெறியையும் பற்றிப் படிக்கும் பொழுது போர்த்துகீசியர்கள் மென்மையானவர்களாகத் தெரிகிறார்கள். இந்தியாவின் மேற்குக் கடற்கரை, வணிகத்தில் தனது முதன்மையை மட்டும் இழந்தது. அஸ்டெக் மக்களோ தங்களது ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் ஸ்பெய்ன் வீரர்களிடம் இழந்தனர்.

அலசல்:
மான்டெஸுமா தலைமையில் 1500-களில் அஸ்டெக் இராஜ்யம் உச்சக்கட்டத்தில் இருந்தது. சூரியனை நடுநாயகமாக வைத்து விரிவான மற்றும் துல்லியமான நாட்காட்டிகளும், திறமை மிகுந்த பாசன வசதிகளும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கப்பல்களும், அவற்றைச் செலுத்த இலகுவான கால்வாய்களும், உயிரியல் பூங்காக்களும், மிதக்கும் செடிப் பூங்காக்களும், திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களும், பார்வையாளர்
விளையாட்டுகளும் மற்றும் வலிமையான இராணுவமும் கொண்ட அதிநவீனக் கலாச்சாரமாகத் திகழ்ந்தது. டெனோச்டிட்லன் ('கனவுகளின் நகரம்')-ஐத் தலைநகரமாகக் கொண்டு, இன்றையக் காலத்து மெக்ஸிகோ நாட்டிலிருந்து இன்றையக் காலத்து க்வாடமாலா நாடு வரையில் பரந்து இருந்தது. பலக் கடவுள்களைக் கும்பிட்டு, தாங்கள் போடும் சண்டைகளின் வெற்றிக்காகவும், நல்ல மழைப் பொழிவதற்கும், நிறைந்த சாகுபடி விளைவதற்கும், அக்கடவுள்களைச் சமாதானப்படுத்த, ஊதுவத்தி, பூக்கள் ஆகியவற்றோடு நிற்காமல், பறவைகள் மற்றும் மனிதர்களைப் பலிக் கொடுத்தனர்.  சிறந்த அளவில் தங்கச் சுரங்கங்கள் இருந்தாலும், அதனை விட, ஜேட் மற்றும் இதர உலோகங்களினால் ஆன வேலைப்பாட்டுப் பொருட்களை விலை மதிப்புள்ளதாகக் கருதினர். மான்டெஸுமா, 1480-இல் பிறந்து, அஸ்டெக் இராஜ்யத்தின் மன்னராக 1503-இல் முடிசூடியப் பின்,
கொடூரமான முறையில் ஆட்சிச் செய்தார். அவரது ஆட்சியில், அருகில் இருந்த குறுநில மன்னரகளை, ராணுவச் சக்தியாலும் வன்முறை மூலமாகவும் அடக்கி அவர்களிடம் இருந்துக் கப்பம் வாங்கிக் கொண்டார். டெனோச்டிட்லன், டெக்ஸ்கோகோ மற்றும் டகுபா இராஜ்யங்களின் மூவர் அணிக்குத் தலைவராக இருந்தார்.
கோர்டெஸ், 1485-இல் ஸ்பெய்ன் நாட்டின் மெடெல்லின் நகரில் பிறந்தவர். முதல் கடல் பயணமாக, 1503-இல் மேற்கு இந்தியத் தீவுகளூக்குச் சென்றார். அன்றையக் காலத்தில், புதிய உலகத்தில் (ஸ்பெய்ன் நாட்டவர்கள், அமெரிக்கக் கண்டத்திற்கு அவ்வாறுப் பெயரிட்டனர்) அற்புதமாகக் கிடைக்கக் கூடிய   செல்வங்கள் பற்றியக் கதைகளைக் கேட்டு, 1504-இல் ஹிஸ்பானியோலாத் தீவிற்குப் பயணம் செய்தார். சில ஆண்டுகளுக்குப் பின், க்யூபா நாட்டின் ஆளுநராக இருந்த டியெகோ வெலாஸ்க்வெஸிடம், தங்கத்தைக் கண்டுப்பிடிக்கும் பயணத்திற்கு நிதி உதவிப் பெற்றுக் கொண்டார்.  அவர்கள் இருவர் இடையே இருந்த நட்புறவு, அஸ்டெக் இராஜ்யத்தைக் கைப்பற்றக் கோர்டெஸ் நடத்திய போர்களுக்கு இடையில் சிதைந்தது. 1519-இல், க்யூபா-வில் இருந்துக் கிளம்பி, தன்னுடன் 500 மாலுமிகள், போர் வீரர்கள் மற்றும் கொல்லர்களுடன், உயர்ந்த ரகத் துப்பாக்கிகள் மற்றும் குதிரைகளுடன், கொஸுமெல் கடற்கரையில் இறங்கினார். பொதிச் சுமக்க அடிமைகளும், சமையல் மற்றும் துணித் தைப்பதற்குப் பெண்களையும் கப்பல்களில் வைத்திருந்தார். முதலில் இறங்கியவுடன், தனது மாலுமிகள் அங்கிருந்த குறு நில மன்னர்களிடன் இருந்துத் திருடியப் பொருட்களை அவர்களிடம் திரும்பக் கொடுத்து, அம்மன்னர்களைத் தன் பக்கம் இழுக்க முயற்சித்தார். அஸ்டெக் இராஜ்யங்களில் உள்ளக் கோவில்களில் மனிதப் பலிக் கொடுத்ததன் வாடைப் பரவலாக இருந்ததைக் கண்டு, கோர்டெஸ், அங்குள்ள மக்களைக் கத்தோலிக்கர்களாக, அவர்கள் விரும்பா விட்டாலும் மதமாற்றம் செய்ய முடிவுச் செய்தார், காண்க்வீஸ்டடோர்களை வரவேற்றக் குறுநில மன்னர்களின் நிலங்களில் கூட, அங்கிருந்தக் அஸ்டெக் கோவில்களில் உள்ள உருவச் சிலைகளை உடைத்து, கர்ப்பக்கிரகத்தைத் துப்புறப்படுத்தி, வெள்ளையடித்து அவற்றைச் சர்ச்சுகளாக மாற்றினார். காண்க்வீஸ்டடோர்களிடம் இருந்த நவீனத் துப்பாகிகளைக் கண்டு அச்சமுற்று, அஸ்டெக் மக்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தனர். ஆரம்பக் காலத்தில், ஜெரோனிமோ டெ அக்வியார் என்றப் பாதிரியார், 1511-இல் வந்தக் கப்பல் பயணத்தில் அஸ்டெக்  வீரர்களிடன் சிக்கி, அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டப் பின், கோர்டெஸிற்கு மிக்க உதவி செய்தார். அவரின் உதவியுடன், கோர்டெஸ் அஸ்டெக் மக்களின் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்துக் கொண்டார். தன்னை எதிர்த்த அஸ்டெக் இராஜ்யங்களின் மீது நடத்தியப் போர்களில், கோர்டெஸ் வெற்றிப் பெற்றார். தான், ஸ்பெய்ன் நாட்டு மன்னரின் ஆணையால் சமாதானம் கோரி அங்கு வந்திருப்பதாகவும், அஸ்டெக் மக்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக மதம் மாற வேண்டும் என்றும் பறைச்சாற்றினார். இவ்வாறுக் கூறியதன் மூலம், தங்கத்தை வேட்டையாடுவது தான் தனது உண்மையானக் குறிக்கோள் என்பதை மறைக்க முடிந்தது.  அஸ்டெக் இராஜ்யங்கள் துப்பாக்கி, பீரங்கி மற்றும் குதிரைகளைக் கண்டிராததால், அவற்றைக் கண்டு, அஸ்டெக் வீரர்கள் மிரண்டனர். மேலும், காண்க்வீஸ்டடோர்களை எதிர்த்துச் சண்டையிடும் பொழுது, ஒருக் கும்பலாக முன்னேறியதால், கோர்டெஸ் தனது பீரங்கிகளை வைத்துக் கூட்டத்தின் நடுவில் சுடுவதன் மூலம், எளிதில் வெற்றிப் பெற முடிந்தது. பீரங்கிகளும் துப்பாக்கிகளும் ஒத்துழைக்காத இராஜ்யங்களில், தன்னுடன் கொண்டு வந்திருந்தக் குதிரைகளைப் பயன்படுத்தி அஸ்டெக் வீரர்களை அடிப்பணியச் செய்தார். பொன்டொன்சான் என்ற இடத்தில் நடந்தச் சண்டையில் அவருக்கு மலின்செ என்ற அடிமைப் பெண் கிடைத்தாள். பின்காலத்தில், கோர்டெஸ் நடத்திய ராணுவ நடப்புகளுக்கு அவருடைய இணைபிரியா சிநேகிதியாக இருந்து, பிறகு அவரது மனைவியாக ஆனாள். மலின்செ தனது அருகில் வந்தவுடன், அஸ்டெக் இராஜ்யத்தின் குறுநில மன்னர்களிடம் கோர்டெஸ் நடத்தும் பேச்சு வார்த்தைச் சுலபமானாலும், பீரங்கிகளையும் குதிரைகளையும் வைத்து எதிராளிகளைச் சிதறடிக்கக்  கோர்டெஸ் தயங்கவில்லை. மலின்செ மொழிப்பெயர்ப்பு உதவியால், மான்டெஸுமாத் தலைமையில் இருந்த மூவர் அணியின் எதிரிகளைத் தன் பக்கம் இழுப்பது சுலபமாகியது.
கோர்டெஸின் ராணுவ வெற்றிகளைப் பற்றி அறிந்தவுடன், சமாதானத்தை மனதில் வைத்து, மான்டெஸுமா, கோர்டெஸிற்கு 200 வேலையாளிகளை அளித்து அவர்களை, காண்க்வீஸ்டடோர்களுக்கு குடிசைகளும் தங்கும் வசதிகளையும் கட்ட ஆணையிட்டார். நிறையத் தங்கம் கொடுத்தால், காண்க்வீஸ்டடோர்கள் திருப்தி அடைந்துத் திரும்பிச் சென்று விடுவார்கள் என்று நினைத்து, கோர்டெஸிற்கு தங்கம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, கோர்டெஸ் விலகாமல் இருந்ததைக் கண்டவுடன், தான் அளித்த 200 வேலையாளிகளைத் திருப்பி வாங்கிக் கொண்டார். மான்டெஸுமா அளித்தத் தங்கத்தைக் கண்டு, கோர்டெஸின் தங்க வெறிக் கூடி, மான்டெஸுமாவை ஆட்சிப்பீடத்தில் இருந்து விலக்க உறுதிப் பூண்டார். இதற்கிடையில், தனது பயணத்திற்கு நிதி உதவி செய்த வெலாஸ்க்வெஸிடம்  இருந்து, தனக்கும் மான்டெஸுமாவிற்கும் நடக்கும் பரிமாற்றங்களை, மறைத்தார்.  மான்டெஸுமா, தனது ஆலோசகர்களுடனும், பூசாரிகளுடனும்  கலந்தாலோசித்ததில், கோர்டெஸ், அஸ்டெக் இராஜ்யத்தின் பழையப் புராணங்களில் விவரிக்கப்பட்டதுப் போல், அஸ்டெக் மக்கள் செய்தத் தவறுகளைத் தண்டிக்க வந்திருக்கும் கடவுள் என்று நம்பினார். அதனால், காண்க்வீஸ்டடோர்களின் மீது தனது படைப்பலத்தைப் பயன்படுத்தாதுத் தாமதித்தார். அந்தத் தாமதம், அவரது விதியை நிர்ணயித்தது. கோர்டெஸ், கபட வேடம் ஆடி, தன் மேல் வெலாஸ்க்வெஸின் அதிகாரத்தை நீக்கியப் பின்னர், தனதுத் தலைமையில் வில்லா ரீக்கா டெ லா க்ரூஸ் என்னும் ஊரை நிறுவினார். இதனை அறிந்தவுடன், கோர்டெஸின் கொட்டத்தை அடக்க, ஸ்பெய்ன் மன்னரிடம் ஒரு விளக்கக் கடிதத்தை தனது கப்பல் படையில் இருந்த ஒருக் கப்பல் மூலம் அனுப்பினார். அதற்கு முன், கோர்டெஸ், அஸ்டெக் இராஜ்யத்தில் இருந்துக் கைப்பற்றிய தங்கத்தை, ஒருக் கப்பலில் ஏற்றி, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதிகளின் தலைமையில், ஸ்பெய்ன் மன்னருக்கு அனுப்பினார். இதன் மூலம், தான் அனுப்பிய தங்கம், வெலாஸ்க்வெஸைக் காட்டிலும் தன்னுடையச் சாதனைகளை ஸ்பெய்ன் மன்னர் ஆதரிப்பதற்கு லஞ்சமாகவும் காப்பீடாகவும் இருக்கும் என்று நம்பினார். மான்டெஸுமா மற்றும் டெனோச்டிட்லன்-இற்கு எதிராக பலக் குறுநில மன்னர்களை கிளர்ச்சியில் எழுப்பினாலும், தனது நயவஞ்சகத்தால், மான்டெஸுமாவிடம் நட்புக்கரம் நீட்டி, அவரை மெத்தனத்தில் ஆழ வைத்தார். கோர்டெஸும் காண்க்வீஸ்டடோர்களும்  தோற்கடித்தச் சிலக் குறுநில மன்னர்கள், தங்களதுப் போர் வீரர்களைக் கப்பமாக அளித்ததன் மூலம் கோர்டெஸின் படைப் பெரிதாகியது. சொளுளா என்னும் அஸ்டெக் இராஜ்யம், ரகசியமாக காண்க்வீஸ்டடோர்களை பதுங்கி இருந்துத் தாக்கத் திட்டமிட்ட போது, அதனை மலின்செ மூலம் அறிய வந்த கோர்டெஸ், சொளூளாவின் அனைத்து பிரபுக்களையும் அவர்களது முதன்மையானத் தெய்வமானக் க்வெட்ஸல்கோட்ல்-இன் புனிதக் கோயிலிற்குள்  வரவழைத்து, அவர்களைக் கோயில் வளாகத்தில் பூட்டி, அவர்கள அனைவரையும் (ஆண், பெண் குழந்தைகள் என்றுப் பார்க்காமல்), கொன்றுக் குவித்தார். கொலைகளை முடித்தப் பிறகு, சொளூளா மக்களின் பரம எதிரிகளை அழைத்து, அந்தக் கோவிலைச் சூறையாட அனுமதித்தார்.
1519-இல் நவம்பர் 8-ஆம் தேதி, கோர்டெஸ் மான்டெஸுமாவைச் சந்தித்தார். கோர்டெஸுடன் மிக்க நாகரிகத்தோடு  நடந்துக் கொண்டாலும், அதற்குப் பிரதியுபகாரமாகக் கோர்டெஸ், மான்டெஸுமா மற்றும் அஸ்டெக் மக்கள் மீதுப் பொய்யான மற்றும் பேய்க் கடவுள்களை வணங்குவதாகக் குற்றம் சாட்டினார். அதன் பிறகு, இராஜதந்திரத் தவறாக, மான்டெஸூமா தனது மாளிகை இருந்த வளாகத்திலேயே, கோர்டெஸ் மற்றும் இதரக் காண்க்வீஸ்டடோர்களைத் தங்க ஏற்பாடுச் செய்தார். இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கோர்டெஸ் அங்கு ஒரு சர்ச்சை நிறுவினார். காண்க்வீஸ்டடோர்கள், டெனொச்டிட்லனின் வணிகச் சந்தைகளையும் (ஐரோப்பாவில் உள்ளவற்றை விட மிகப் பரந்த அளவில் இருந்ததனால்), அஸ்டெக் தொழிலாளர்களின் நேர்த்தியான உலோக வேலைப்பாட்டினையும் கண்டுத் திகைத்தனர். சிலக் காண்க்வீஸ்டடோர்களை, மூவர் அணியைச் சார்ந்த ஒரு அஸ்டெக் குறுநில மன்னர் கொன்றதைச் சாக்காகக் காட்டி, மான்டெஸுமாவைக் கோர்டெஸ் சிறையில் அடைத்தார். அந்தக் குறுநில மன்னரை டெனோச்டிட்லனிற்கு வரவழைக்குமாறு மான்டெஸுமாவை வற்புறுத்தி, அந்தக் குறுநில மன்னர் வந்தவுடன், அவரைச் சிறையெடுத்து,  சங்கிலியில் கட்டிப்போடப்பட்டிருந்த மான்டெஸுமா மற்றும் அஸ்டெக் பிரபுக்களுக்கு முன்னால், அவரைத் உயிரோடுத் தீயிடக் கோர்டெஸ் ஆணையிட்டார். மான்டெஸுமாவின் மாளிகை வளாகத்தில் சர்ச்சைக் கட்டும் பொழுது, பொய்க் கதவுகளுக்குப் பின்னால், நிறைய அளவுத் தங்கம் இருப்பதைக் கண்டக் காண்க்வீஸ்டடோர்களிடம், அதனை உடனேச் சூறையாடுவதற்குப் பதில், அஸ்டெக் இராஜ்யத்தை முழுவதும் கைப்பற்றியப் பிறகு, அவற்றைத் தங்கள் வசமாக்கிக் கொள்ளுமாறு, கோர்டெஸ் ஆணையிட்டார். தனதுக் கைதியாக இருந்த மான்டெஸுமாவிடம், தங்கக் கிடங்குகள் இருக்கும் இடத்தைத் தன்னிடம் சொல்லுமாறு வற்புறுத்தினார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில், மான்டெஸுமா தங்கச் சுரங்கங்களைக் கண்டுப்பிடிக்க  வழிகாட்டிகளைத் தருவதாகக் கூறினார். கோர்டெஸை நோக்கி மான்டெஸுமாவின் செயல்களுக்கு மூவர் கூட்டணியில் இருந்த மற்ற இரு மன்னர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், காண்க்வீஸ்டடோர்களைத் தோற்கடிக்க இயலாமல், அந்த இரு மன்னர்களும் கைதாக்கப்பட்டுச் சங்கிலியில் கட்டப்பட்டனர். மான்டெஸுமா, அதன் பிறகு, காண்க்வீஸ்டடோர்கள், அஸ்டெக் புராணங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் கடவுள்கள் என்றுக் கூறித் தனது மற்றும் அஸ்டெக் மக்களின் விசுவாசத்தை, எழுத்துப்பட அளித்தார். கோர்டெஸ், தனதுக் கைக்கு மான்டெஸுமாவின் சரணாகதிக் கையெழுத்துக் கிடைத்தவுடன், அஸ்டெக் இராஜ்யத்தில் உள்ளத் தங்கத்தை உருக்கி, அதனை தங்கப் பட்டைகளாக ஸ்பெய்ன் நாட்டிற்கு கப்பல்களில் அனுப்பினார். இவ்வாறு ஸ்பெய்ன் மன்னருக்குத் தங்கத்தை அனுப்பியதன் மூலம், தனக்கு அந்தத் தங்கத்தில் இருபது விழுக்காடுப் பங்கிற்கான (ஸ்பெய்ன் மன்னருக்கு அந்தத் தங்கத்தில் மற்றொரு இருபது விழுக்காடுப் பங்குக் கிடைத்தது) உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டார். மீதி இருந்த தங்கத்தை மற்றக் காண்க்வீஸ்டடோர்களுக்கிடையேப் பிரித்துக்  கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். தங்கப் பிரிவினையை முடிவு செய்தப் பின், கோர்டெஸும் இதர காண்க்வீஸ்டடோர்களும் மான்டெஸுமாவின் மாளிகை வளாகத்தில் இருந்த எல்லா அஸ்டெக் கோவில்களில் உள்ள உருவச் சிலைகளை உடைத்து, அக்கோவில்களைச் சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து, அங்கு யேசு மற்றும் புனித மேரியின் உருவச் சிலையை நிறுவினர். ஸ்பெய்ன் மன்னருக்கு கோர்டெஸ் தங்கம் அனுப்பினார் என்றச் செய்திக் கேட்டதும், வெலாஸ்க்வெஸ் கோர்டெஸைத் தோற்கடிக்க கப்பல் படை ஒன்றை அனுப்பினார். தனது சமயோசித்தத்தாலும், தாராளமாக லஞ்சம் கொடுத்ததாலும், கோர்டெஸ் இலகுவாக வேலாஸ்க்வெஸின் படையைத் தோற்கடித்தார்.
கோர்டெஸ் வேலாஸ்க்வெஸின் படையுடன் சண்டையிடச் சென்றிருந்த பொழுது, டெனோச்டிட்லனில் தனக்குப் பதிலாக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானத் தளபதிகளில் ஒருவரான அல்வராடோவை நியமித்துச் சென்றிருந்தார். தங்களது மதத்தில் மிக முக்கிய விழாவான டொக்ஸ்காட்ல்-ஐக் கொண்டாட, காண்க்வீஸ்டடோர்களிடம் அனுமதி வாங்கி, அதற்கான ஆயத்தங்களைச் செய்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், அஸ்டெக் பிரபுக்கள் விழாக் கொண்டாட்டத்தைக் காரணமாகக் கொண்டு, காண்க்வீஸ்டடோர்களைக் கைது செய்து, டெனோச்டிட்லனை மீண்டும் கைப்பற்றத் திட்டம் தீட்டியிருந்தனர். விழாவின் பொழுது நடந்தச் சண்டையில், காண்க்வீஸ்டடோர்கள் அஸ்டெக் வீரர்களின் கையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த பொழுது, அல்வராடோ, சங்கிலியில் கட்டப்பட்டிருந்த மான்டெஸுமாவை வளாகத்தின் கூறைக்கு மேல் கத்தி முனையில் கொண்டு போய், அஸ்டெக் மக்களைச் சமாதானப்படுத்துமாறு ஆணையிட்டார். அந்த ஆணையை ஏற்று, மான்டெஸுமா தன் மக்களிடம் சண்டையை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டார். கோர்டெஸ் திரும்பி வந்தவுடன், நிலைமை மோசமானதற்கு அல்வராடோ மற்றும் மான்டெஸுமாவைக் கண்டித்தார். மான்டெஸுமாவைத் தனக்குப் பின் வர வேண்டிய மன்னரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னவுடன், மான்டெஸுமா தனதுத் தம்பி குயிட்லஹுவாக்கைத் தேர்ந்தெடுத்தார். உடனடியாக, குயிட்லஹுவாக் எஞ்சி இருந்த அஸ்டெக் பிரபுக்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு, மான்டெஸுமாவின் அதிகாரத்தை ரத்துச் செய்து அஸ்டெக் இராஜ்யத்தின் மன்னரானார். டெனொச்டிட்லன் வளாகத்திற்குள் இருந்த கோர்டெஸ் மற்றும் இதரக் காண்க்வீஸ்டடோர்களுடன் போரிட ஆரம்பித்தார். அவர்களின் முற்றுகையைத் தாக்குப்பிடிக்கத் திணறிய பொழுது, கோர்டெஸ், மான்டெஸுமாவை மீண்டும் தனது மக்களைச் சமாதானப்படுத்தும்படிக் கேட்டுக் கொண்டார். இந்த முறை, மான்டெஸுமா மறுத்தவுடன், அவரைச் சங்கிலியில் வளாகத்தின் கூறைக்கு இழுத்துச் சென்றார். அஸ்டெக் மக்கள் மான்டெஸுமாவைப் பார்த்தவுடன், அவர் மேல் கற்களை எறிந்தனர். அதனால் ஏற்பட்டக் காயங்களினால், மான்டெஸுமா உயிர் துயர்ந்தார்.
க்யிட்லஹுவாக், காண்க்வீஸ்டடோர்களை எங்குப் பார்த்தாலும் எல்லா நேரங்களிலும் எதிர்க்கும் மூலோபாயத்தைக் கையாண்டாலும், மான்டெஸுமாவின் தவறுகள் அஸ்டெக் மக்களின் நிலையைப் பலவீனப்படுத்தியிருந்தது. டெனோச்டிட்லன், எல்லாப் பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டிருந்ததனால், மாளிகை வளாகத்திற்குள் செல்லும் வழிப்பாதைகளை, ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தையும் அகற்றியதால், கோர்டெஸும் இதரக் காண்க்வீஸ்டடோர்களும் வெளியில் தப்புவதற்கு ஒரு வழி மட்டுமே இருந்தது. அதனால், கோர்டெஸ், எல்லாக் காண்க்வீஸ்டடோர்களும் அவரவர் கைகளில் எவ்வளவுத் தங்கம் எடுத்துக் கொள்ள முடியுமோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு (ஸ்பெய்ன் மன்னருக்குத் தங்கம் கப்பலில் அனுப்பியதால், கோர்டெஸ் தனதுப் பங்கிற்கு உத்தரவாதம் பெற்றிருந்தார்), மறு நாள் காலை, பனிமூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது, டெனொச்டிட்லனில் இருந்துத் தப்ப ஆணையிட்டார். காண்க்வீஸ்டடோர்கள் டெனொச்டிட்லனில் இருந்துத் தப்ப முயற்சிக்கும் பொழுது, அஸ்டெக் வீரர்கள், மாளிகை வளாகத்தைச் சுற்றி இருந்த நீர் நிலைகளில் சிறியப் படகுகளில் இருந்துத் தாக்கினர். இதனால், காண்க்வீஸ்டடோர்களின் அணியில் மிகுந்த உயிர்ச் சேதம் உண்டாகியது. காண்க்வீஸ்டடோர்கள் பின்வாங்கத் தொடங்கியவுடன், சந்தோஷத்தில் அஸ்டெக் வீரர்கள் அவர்களை துரத்திக் கொல்வதை நிறுத்தினர். அதனால், கோர்டெஸ் மற்றும் இதரக் காண்க்வீஸ்டடோர்களுக்கு உயிர் பிச்சைக் கிடைத்தது. காண்க்வீஸ்டடோர்கள் பின்வாங்கிச் செல்லும் பொழுது, சிறியக் கூட்டங்களில் அஸ்டெக் வீரர்கள் அவர்களைப் பாடுபடுத்தினாலும், பீரங்கிகள், குதிரைகள் மற்றும் நேர்த்தியான போர்த்திறனைப் பயன்படுத்தி, அஸ்டெக் வீரர்களைத் தோற்கடித்தனர்.
கோர்டெஸ், அஸ்டெக் மக்களின் மூவர் அணியைச் சார்ந்தக் குறுநில மன்னர்களைத் தாக்கி, தோற்றவர்களின் (ஆண், பெண், குழந்தைகளிடையே வித்தியாசம் பார்க்காமல்) முகத்தில், 'ஜி' (க்வெரா அல்லது போர்) எழுத்தைப் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் பதித்தார். மேலும், 2,000 ஆயுதமில்லா மக்களைக் கொன்று, அவர்களின் குடும்பங்களின் முகத்தில் அதே முத்திரையைப் பதித்தார். ஸ்பெய்ன் நாட்டிலிருந்து காண்க்வீஸ்டடோர்களின் ஆதரவாக வீரர்கள் மற்றும் பொருட்கள் வந்து இறங்கின. அது, கோர்டெஸின் படையை வலுப்படுத்தினாலும், அஸ்டெக் இராஜ்யத்தில் கிடைக்கும் தங்கத்தைப் பிரித்துக் கொள்பவர்களின்  எண்ணிக்கையைக் கூட்டியது. காண்க்வீஸ்டடோர்கள் களைப்புப் போக இளைப்பாறிக் கொண்டிருந்த பொழுது, பெரியம்மை நோய், அஸ்டெக் மக்களைக் கொன்றும் உயிரோடு இருந்தவர்களின் முகத்தை விகாரமாக்கியும் கோரத் தாண்டவமாடியது. காண்க்வீஸ்டடோர்களின் கப்பல்களில் உள்ள அடிமைகளில்  ஆஃப்ரிக்கா-வில் பிறந்த ஒருவரின் உடலில் இருந்த பெரியம்மைக் கிருமி அந்த நோய் பரவக் காரணமாக இருந்தது. இந்த நோயின் உளவியல் தாக்கம் அஸ்டெக் மக்களின் நடுவே மிகப் பெரிய அளவில் இருந்தது - கோர்டெஸ் மற்றும் இதரக் காண்க்வீஸ்டடோர்கள் ஐரோப்பாவில் பெரியம்மைக் கிருமியை எதிர்கொண்டிருந்ததால், அதனால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் அவர்களைக் காற்றது. அதே நேரத்தில், அஸ்டெக் மக்கள் பெரியம்மைக் கிருமியைத் தங்கள் நிலத்தின் வரலாற்றிலேயே எதிர்கொள்ளவில்லை என்பதால், அந்த நோயின் கடுமையில் மடிந்தனர். பெரியம்மை, காண்க்வீஸ்டடோர்களை அண்டாமல் இருப்பதைக் கண்டு, அஸ்டெக் மக்கள் மனமுடைந்தனர்.
டெனொச்டிட்லனின் பாதுகாப்பை முன்பு ஒரு முறை வகுத்திருந்ததால், அதனை நில வழியால் தாக்குவதுக் கடினம் என்றுக் கோர்டெஸ் உணர்ந்திருந்தார். அதனால், மிகத் தைரியமாக, நாற்பதிலிருந்து ஐம்பது அடி வரை நீளமான வலுவானப் படகுகளை வடிவமைத்து, ஒவ்வொன்றாகக் கட்டி, அவற்றின் கடல் நீர் எதிர்கொள்ளும் திறனைப் பரீட்சைச் செய்து, அவற்றைப் பிரித்தெடுத்து, மலைகளின் மேல் அவற்றைத் தூக்கிக் கொண்டுப் போய், டெக்ஸ்கோகோ இராஜ்யத்தில் அவற்றை மீண்டும் கட்டி, நீரிலிருந்து டெனொச்டிட்லனைத் தாக்க முடிவு செய்தார். அந்தத் திட்டம் வெற்றியடைய, ஒரு மைல் நீளக் கால்வாய் ஒன்றை, 10 அடி ஆழமாகவும் 15 அடி அகலமாகவும், கட்ட முடிவுச் செய்தார். ஏனெனில், அஸ்டெக் வீரர்களின் சரமாரி அம்புகளின் வரம்பிற்கு அப்பால் கப்பல் கட்டும் பணியை மேற்கொள்ள அந்தக் கால்வாய் உதவும் என்று நம்பினார். அஸ்டெக் மக்கள் இதைக் கண்டு, கப்பல் கட்டும் முயற்சியை முறியடிக்க நிறையத் தாக்குதல்களை நடத்தினர். ஆனால், கோர்டெஸ் மற்றும் இதரக் காண்க்வீஸ்டடோர்கள், வெற்றிகரமாகக் கப்பல்களை, கால்வாயில் மிதக்க விட்டனர். இந்த நேரத்தில், அஸ்டெக் இராஜ்யத்தின் மன்னர் க்யிட்லஹுவாக் பெரியம்மை நோயினால் இறந்தார். அவருக்கு அடுத்து, மான்டெஸுமா மற்றும் க்யிட்லஹுவாக்கின் மருமகனான க்வஹ்டமொக் மன்னரானார். அஸ்டெக் இராஜ்யத்தின் இறுதி எதிர்ப்பை, கோர்டெஸ் அவரைக் கைப்பற்றும் வரை, அவர் தலையெடுத்து நடத்தினார். முதல் வேலையாக, டெனொச்டிட்லனின் பாதுகாப்பை வலுப்படுத்த, பழுதுப் பார்க்கும் வேலைகளில் ஈடுப்பட்டார். காண்க்வீஸ்டடோர்களிடம் தொடர்ந்துச் சண்டைப் போட்டதில் இருந்து, அவர்களை எதிர்க்க சிறிய அளவிலானப் படைகள் மிகவும் அவசியம் என்று முடிவுச் செய்து, காண்க்வீஸ்டடோர்களின் மேல் அவற்றை ஏவினார். இறுதிச் சண்டைக்கு முன், கோர்டெஸ் அணியில் 900 காண்க்வீஸ்டடோர்களும், 200,000 இலிருந்து 500,000 வரை எண்ணிக்கை உள்ள தோழமையாக இருந்தக் குறுநில மன்னர்களின் அஸ்டெக் வீரர்களும் இருந்தனர். க்வஹ்டமொக் ஆணையிட்டச் சிலத் தாக்குதல்களில் இருந்துக் கோர்டெஸ் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். ஒரு முறை, க்வஹ்டெமொக், காண்க்வீஸ்டடோர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்த இடத்தை உப்பு நீரால் மூழ்கடிக்க, அருகில் இருந்த ஒரு அணையைத் திறந்து விட்டார். கோர்டெஸிற்குத் தோழமையாக இருந்த அஸ்டெக் வீரர்கள் இதனைக் கண்டுப்பிடித்து, காண்க்வீஸ்டடோர்களின் உயிரைக் காப்பாற்றினர். டெனொச்டிட்லனின் குடிநீர்ப் பாசனம், சபுல்டெபெக் எனும் கால்வாயை நம்பி இருந்ததனால், இரு அணிகளிலிருந்தும் அதனைக் குறியாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அஸ்டெக் வீரர்களின் எதிர்ப்பையும் மீறி, காண்க்வீஸ்டடோர்கள், அந்தக் கால்வாயைப் பழுதுப்படுத்தியதனால், டெனொச்டிட்லனின் இறுதிச் சண்டையின் பொழுது, குடிநீர்ப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டியப் பொறுப்பு, க்வஹ்டமொக்கின் தலையில் இறங்கியது. புதிதாகக் கட்டியப் கப்பல்களின் மூலம், அஸ்டெக் வீரர்களின் அம்புகளின் பாதிப்பு இல்லாமல், மாளிகை வளாகத்திற்குள், பீரங்கிகளால் காண்க்வீஸ்டடோர்கள் சுட்டுத் தள்ளினர். புதியக் கப்பல்களை, அஸ்டெக் வீரர்களின் சிறியப் படகுகளினால் எதிர்கொள்ள முடியவில்லை.
ஆகஸ்ட் 13, 1521-இல் க்வஹ்டமொக்கைக், கோர்டெஸ் கைப்பற்றினார். முதல் வேலையாக, பெரியம்மை நோய் மற்றும் பஞ்சத்தினால் நிகழ்ந்த இழப்புகளைச் சரிக்கட்டுவதைப் பற்றி ஆலோசிப்பதற்குப் பதிலாக, தங்கக் கிடங்குகள் இருக்கும் இடத்தைக் கூறுமாறு, கோர்டெஸ், க்வஹ்டமொக்கிடம் ஆணையிட்டார். க்வஹ்டமொக் அதனை மறுத்தவுடன், கோர்டெஸ், அவரைக் கம்பத்தில் கட்டி, காலில் எண்ணையை ஊற்றி, அதற்குத் தீ வைத்துக் கொடுமைப்படுத்தினார். அதற்குப் பின்னரும் க்வஹ்டமொக் எதுவும் சொல்லாததால், கோர்டெஸ் அவரை விடுவித்தார். சில வருடங்களுக்குப் பிறகு, க்வஹ்டமொக், ஸ்பெய்ன் நாட்டிற்கு எதிரானப் புரட்சியில் பங்கெடுத்தார் என்றுப் பொய்யாகக் குற்றம் சாட்டி, அவரைத் தூக்கில் தொங்க விட்டார். அஸ்டெக் இராஜ்யத்தைக் கைப்பற்றியதன் மூலம், காண்க்வீஸ்டடோர்களுக்குத் தலைக்கு 160 பெஸோ அளவிற்குப் பரிசுக் கிட்டியது. கோர்டெஸ் மற்றும் ஸ்பெய்ன் மன்னர் பிரம்மாண்ட அளவில் செல்வத்தைச் சேர்த்தனர். அஸ்டெக் இராஜ்யத்தில் இருந்து கோர்டெஸ் அனுப்பிய தங்கத்தை இறுதியாகக் கொண்டுச் சென்ற கப்பல், கடலில் ஃப்ரென்ச் நாட்டின் கடல் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது(இந்தப் புதையலைத் தான் முதல் பைரெட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் காட்டியிருக்கிறார்கள்). அஸ்டெக் இராஜ்யத்தில், தாங்கள் முதலில் பறைசாற்றியதுப் போல், காண்க்வீஸ்டடோர்கள் அஸ்டெக் கடவுள்களின் உருவச் சிலைகளை உடைத்து அந்தக் கோவில்களின் மேல் சர்ச்சுகளைக் கட்டினர்.
கோர்டெஸ் மற்றும் மலின்செவிற்கு மார்ட்டின் என்ற மகன் பிறந்தான். கோர்டெஸின் முதல் மனைவி, கடலினா, ஸ்பெய்னிலிருந்து வந்து, கோர்டெஸுடன் அனைவர் முன்னால் போட்டச் சண்டைக்குப் பிறகு, கொலையுண்டுக் காணப்பட்டார். அதன் பிறகு, ஸ்பெய்ன் நாட்டின் மன்னர், கோர்டெஸை, மெக்ஸிகோவின் கேப்டன் ஜெனரலாக நியமித்தார். 1536-இல் கோர்டெஸ், பாகாக் கலிஃபோர்னியாவைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு, கோர்டெஸின் கடல் என்று அழைக்கப்படும் கலிஃபோர்னியா வளைகுடாவைக் கண்டுப்பிடித்தார். இறுதிக் காலத்தில், ஹாண்ட்யூரஸ், க்வாடெமாலா மற்றும் அல்ஜியர்ஸ்-ஐக் கைப்பற்றும் அவரது முயற்சிகள் வீண் போயின. டிசம்பர்2, 1547-இல் இறக்கும் பொழுது மிகப் பெரியச் செல்வந்தராக இறந்தார்.
சில மேற்கத்திய ஆசிரியர்கள், ஐரோப்பிய நாட்டவர்கள், ஐரோப்பியர் அல்லாத நாட்டவர்களைத் தோற்கடித்ததற்கானக் காரணங்களாக, சமூகத்தினால் கிடைத்த அனுகூலங்களைச் (நோய், பீரங்கிகள்) சுட்டிக் காட்டியிருக்கின்றனர். வேறு சிலர், பெரிய மனிதர்கள் தங்கள் திறனால் உலக வரலாற்றை மாற்றி இருக்கின்றனர் என்று வாதாடியிருக்கிறார்கள். பெரிய மனிதர் கோட்பாட்டின் உதாரணமாக கோர்டெஸ் திகழ்கிறார். மான்டெஸுமாவின் பரிதாபத் தோல்வியையும் கோர்டெஸின் அபார வெற்றியையும் விளக்கும் இந்த இருக் கோட்பாடுகளும், கோர்டெஸின் முதன்மையான மூலோபாயத்தை ஆதரிக்க உதவுகின்றன - ஐரோப்பியர்கள், தங்களது மதத்தின் பெயரிலும், பணத்தாசையாலும், பொய், பித்தலாட்டம் மற்றும் கொலைச் செய்வதில் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். ஐரோப்பியர்களுக்குப் பிரகாசிக்கும் பொருளாகத் தோன்றியத் தங்கம், அஸ்டெக் மக்களுக்கு, சாதாரண ஒரு உலோகமாகத் தோன்றியது. தங்களதுச் செல்வத்தின் காரணமாக மெத்தனமாக இருந்த அஸ்டெக் மன்னர்கள், தங்கள் இருத்தலியலிற்கு ஐரோப்பியர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலை சிறிதாக எடைப் போட்டனர்.  அதன் விளைவாக, ஐரோப்பியர்கள் மேலோங்கி உயர்ந்த அதேச் சமயத்தில், அஸ்டெக் நாகரிகம் ஒரேயடியாக அழிந்தது.

No comments: