நீயும் பொம்மை நானும் பொம்மை

சுருக்கம்:
2000 - 2010-ஆம் வருடங்களுக்குள், அமெரிக்கா-வில் நிகழ்ந்த வீட்டு விலை ஏற்றத்தின் பொழுது, வீட்டின் மதிப்பு வெகு அதிகமாகக் கூடினாலும்
அதனைக் கண்டு அஞ்சாமல் மக்கள் அதிக விலைக் கொடுத்து வீடு வாங்கினர். வீட்டின் விலை எப்பொழுதும் ஏறிக் கொண்டேப் போகும் என்ற (தவறான) எதிர்ப்பார்ப்பில் அவ்வாறுச் செய்தனர். வீட்டு விலைச் சரிய ஆரம்பித்த பொழுது, வீடு வாங்கியவர்களுக்கு அது அதிர்ச்சியை அளித்தது. 1990-களில், இன்டர்நெட் பங்குகளில் அதேப் போல் அமெரிக்க மக்கள் முதலீடுச் செய்து ஏமாற்றமடைந்தனர். இந்தப் புத்தகத்தில், குழந்தைகள் விளையாடக் கூடியப் பீனிப் பேபிப் பொம்மைகள் வீடு மற்றும் இன்டர்நெட் நிறுவனப் பங்குகள் போல் அமெரிக்க மக்களின் முதலீட்டுக் கவனத்திற்கு வந்ததையும் அதனால் ஏற்பட்டப் பித்தையும் ஆசிரியர் விவரித்திருக்கிறார். இந்தப் புத்தகம் முழுவதும், தங்களது அனுபவத்தில், இம்மாதிரி முதலீடுகள் சோகத்தில் தான் முடியும் என்றப் பாடத்தை அறிந்திருந்தாலும், அதை மறந்துத் தங்களிடம் இருந்தப் பணத்தை அப்பொம்மைகளில் கரைத்தனர். அப்பொம்மைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதைக் கண்டு, வருங்காலத்தில் மேலும் கூடும் என்று நம்பினர். பீனிப் பேபிப் பொம்மைகளை உருவாக்கிய டை வார்னர் என்றத் தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்றையும் இதில் விவரித்திருக்கிறார். அவர், பொம்மைத் தொழிலில் தனக்கென்று ஒருத் தனி வழியை அமைத்து வெற்றிக் கண்டார். பீனிப் பேபிப் பொம்மைகளின் சுற்றியிருந்தப் பித்திற்கு அவர் காரணம் இல்லை என்றாலும், தனது செல்வச் செழிப்பிற்கு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தப் பின், அந்தப் பித்தை நீட்டிக்க மிகவும் முயற்சிச் செய்தார்.
அமெரிக்கா-வின் பொருளாதாரம் நுகர்வோர்களின் தாராளமானச் செலவுப் போக்கை அடித்தளமாகக் கொண்டதினால், மேலும் மேலும் பொருட்களைக் கொள்முதல் செய்யும் தூண்டுதல் அதிகமாக இருக்கிரது. 1970 வரை, நுகர்வோரின் கொள்முதலுக்காகக் கடன் அளிப்பதில், கட்டாயமான விதிகள் இருந்த்தால், அதுச் சமநிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் பின், அந்த விதிகளைத் தளர்த்துவதற்கு அமெரிக்கா-வின் அரசியல் கட்சிகள் செய்த முயற்சிகள், இந்தச் சமநிலையைக் குலைத்து, மக்களைச் செலவுச் செய்யத் தூண்டின. இதனால், செலவுச் செய்பவர்கள், அதற்கேற்றப் பண வசதித் தங்களிடம் இருக்கிறதா என்றக் கேள்வியைக் கேட்பதைப் பெரும்பாலும் தவிர்த்தனர். இதன் விளைவாக, அமெரிக்கா-வில் உள்ள நுகர்வோர்கள், தங்களுக்கு அதிகம் லாபம் தரும் முதலீடுகளைத் துரத்துவதில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த முதலீடுகள், பொய் பித்தலாட்டம் மூலம் மக்களுக்கு விற்கப்பட்டாலும் அதில் பணத்தை இழந்தப் பின்னரும் தங்களின் குறைகளை நிவர்த்திச் செய்யாமல் இருந்தனர்.
அலசல்:
அவ்வப்போது, அமெரிக்கா-வில் உள்ள மக்கள் ஏதாவதுப் பொருளைக் கொள்முதல் செய்வதில் பித்துப் பிடித்து அலைகின்றனர் - இன்டர்நெட் பங்குகள், வீடுகள் அல்லது இந்தப் புத்தகத்தில் விவரித்திப்பதுப் போல், பீனிப் பேபிப் பொம்மைகள். இந்தப் பொம்மைகள், குழந்தைகள் கையில் வைத்து விளையாடுவதற்கு இலகுவாகச், சிறியதாகவும் மென்மையாகவும் இருக்கும். இப்பொழுது, இன்டர்நெட்டில் அவற்றை ஒன்றுக்கு $5 விலைக் கொடுத்து வாங்கலாம்(கூகுள் இணையத்தளத்தில் "ஓய்வுப் பெற்ற" 1 பீனிப் பேபிப் பொம்மை 25,000 டாலருக்குக் கிடைக்கும்). 1990-களில், சில மக்களின் பொருளாதார வாழ்க்கையை சிதைப்பதற்கு இந்தப் பொம்மைகளில் இருந்தப் பித்துக் காரணமாக இருந்தது. பொருட்களைச் சார்ந்தப் பித்துக்கள், காலகாலமாக நடந்து வருகின்றன. அவை, உலகில் எல்லா நாடுகளிலும் வெடிக்கின்றன. சார்ல்ஸ் மாக்கே 1841-இல் எழுதிய 'எக்ஸ்ட்ராடினெரி பாப்புலர் டெலுஷன்ஸ் ஆண்ட் தி மேட்னஸ் ஆஃப் க்ரவுட்ஸ்' புத்தகத்தில் இதற்கு நிறைய உதாரணங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன - 1600-களில் இன்றைய நெதர்லாண்ட் நாட்டில், அல்லிப் பூக்களின் மீதுள்ளப் பித்தில், மக்கள் அதிக அளவில் தங்கள் பணத்தை இழந்தனர். இந்தப் புத்தகத்தில், பீனிப் பேபிப் பொம்மைகளைக் உருவாக்கிய டை வார்னர்-இன் வாழ்க்கைச் சரித்திரத்தையும் விவரித்திருக்கிறார்கள்.
குழந்தைகள் விளையாடுவதற்காகப் பஞ்சடைக்கப்பட்டுள்ள மிருகப் பொம்மைகள், 1885-ஆம் வருடம், ஜெர்மனி-யில், போலியோ-வால் பாதிக்கப்பட்ட அப்போலோன்னியா மார்க்கெரெட் ஸ்டீஃப் என்பவரால் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. தனது நண்பர்களிடையே, தான் செய்தப் பஞ்சடைக்கப்பட்டச் சிறிய மெத்தைகளுக்கு அமோகமான வரவேற்பு இருந்ததைக் கண்டு அவர் இந்தப் பொம்மைகளை உருவாக்குவதில் இறங்கினார். இந்தப் பொம்மைகளின் தேவை அதிகமானப் பொழுதுத், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளிக்கு வேலை அளிக்கும் வாய்ப்பாக அவர்களைத் தன்னுடையத் தொழிற்சாலையில் வேலையில் அமர்த்தினார்.  அமெரிக்கா-வில், 1880-இல் இருந்து 1910-இற்குள் பரவியத் தொழில் புரட்சியினால், கிராமத்தில் இருந்து அதிக அளவில் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால், முன்பு மிருகங்கள் அதிகமாக இருந்த இடங்களில் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்க நகரங்களில் தங்களுக்குக் கிடைக்கும் பஞ்சடைத்த மிருகப் பொம்மைகள் மூலம் நினைவுக் கூர்ந்து அவற்றைத் தங்களதுக் குழந்தைகளின் வாழ்க்கையில் பிரதான விளையாட்டுப் பொருளாக்கினர். பஞ்சடைத்த மிருகப் பொம்மைகளில் இன்றும் பரவலாக விற்கும் டெட்டி பேர், 1902 வருடம் அமெரிக்கா-வின் ஜனாதிபதியாக இருந்த தியோடோர் ரூஸவெல்ட், லுயிஸியானா மற்றும் மிஸ்ஸிஸ்ஸிப்பி மாநிலங்களில் உள்ளக் காடுகளில் வேட்டையாடச் சென்று வெறுங்கையுடன் திரும்பியதைக் கண்டு அவருடைய ஏமாற்றத்தைக் குறைக்கும் வகையில் ஒரு வயதானப் பெண் கரடியைக் கட்டி வைத்து அதனை இலக்காகத் தயார் செய்தனர். இதனை அறிந்த ரூஸவெல்ட், அப்படி வேட்டையாடப்பட்டக் கரடித் தனக்கு வேண்டாம் என்று மறுத்ததை அடுத்து, அவரது வேட்டையாடும் குழுவில் இருந்த மற்றொருவர் அந்தக் கரடியைக் கத்தியால் வெட்டிக் கொன்றார். இதனை, வாஷிங்க்டன் போஸ்ட் நாளிதழ், கேலிச் சித்திரம் மூலம் பிரபலாமாக்கியதில் (அந்தக் கரடிக் கொல்லப்பட்ட உண்மையை வெளியில் சொல்லாமல்), ரூஸவெல்ட், கரடியைக் கருணைக் கொலைச் செய்தார் என்றக் கருத்துப் பரவலாகியது. ஸ்டீஃப்-இன் நிறுவனம் இதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அதே வருடம், (1902) டெட்டிப் பேர் பொம்மைகளை அமெரிக்கா-வில் விற்கத் தொடங்கியது. 1908 வருடத்திற்குள், டெட்டிப் பேர் பொம்மைகளின் விற்பனைச் சமநிலையை அடைந்தது. அதன் பின், குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டப் பொம்மைகளை, மாட்டெல் மற்றும் ஹாஸ்ப்ரோ நிறுவனங்கள், புதிதாக மக்களிடம் பிரபலமானத் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம், அதிக அளவில் லாபம் சம்பாதித்தன. தொலைக்காட்சியில் தங்களதுப் பொம்மைகளை விளம்பரப்படுத்தாத நிறுவனங்களின் லாபம் மிகவும் மலிந்தன. தங்களதுப் பொம்மைகளைத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்த நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதித்தன. 1980-களில், பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகளின் விற்பனை ஒருச் சமநிலையை அடைந்திருந்தது.
தொகுப்பாளர்களிடம் விற்பதற்கு அடித்தளமாக மக்கள் எந்த ஒருப் பொருளையும் அதனை விலை மதிப்புள்ளது என்றுக் கூறி விற்றால், அதிக அளவில் பணம் கொடுத்து வாங்குவார்கள். அப்பொருளுக்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை என்றாலும், பொய் மற்றும் பித்தலாட்டத்தினால் அதனை அதிக விலைக்கு விற்கலாம். அமெரிக்கா-வில் பென்ஸில்வேனியா மாநிலத்தில் உள்ள வார்ட்டன் வணிகக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த
ஜோசப் ஸேகல் என்பவர், வெள்ளியால் ஆனப் பதக்கங்களை மிகக் குறைந்த அளவில் (100) விற்கும் முயற்சியில் இறங்கினார். தேசிய நினைவக அமைப்பு என்றப் பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து, அதன் உறுப்பினர்களுக்கு அந்த வெள்ளிப் பதக்கங்கள் கிடைக்கும் என்றுக் கூறினார். பதக்கங்களின் பற்றாக்குறையினாலும் வருங்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலும், 5,250 உறுப்பினர்களை அவரால் சேர்க்க முடிந்தது. அவர் விற்ற நினைவுச் சின்னத் தட்டுகளை மக்கள் அதிக அளவில் வாங்க ஆரம்பித்தனர் - அந்தத் தட்டுகள் உண்மையில் எதையும் குறிக்கவில்லை என்றாலும் மக்கள் அவற்றை வாங்கினர். பின்னர், அந்த அமைப்பின் பெயரை ஃப்ராங்க்ளின் மிண்ட் என்று மாற்றினார் - ஃப்ராங்க்ளின் என்றப் பெயர் அவருக்கு நினைவு வந்ததால் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார். அவரது நிறுவனத்தின் வெற்றியை அடுத்து, அந்த நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட்டார். பழைய நினைவுத் தட்டுகளின் சந்தையில் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்தது. கொடிக்கட்டிப் பறந்துக் கொண்டிருந்த இந்த நிறுவனம், விசாரணையில் தேர்ந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான அறுபது நிமிடங்கள் அலசியதில் அதன் போக்கிரித்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. ஃப்ராங்க்ளின் மிண்ட் விற்கும் தட்டுகளின் வெள்ளி எடை மிகக் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்ததுப் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தது. இது நடப்பதற்குள், ஜோசப் ஸேகெல் ஃப்ராங்க்ளின் மிண்டை விட்டு விலகி இருந்தார். அவருக்குப் பின் வந்த நிறுவனங்கள், அவரை விட அதிகமாகப் பொய் மற்றும் பித்தலாட்டம் செய்துத் தங்களது லாபத்தை அதிகரித்துக் கொண்டன. 1993-ஆம் வருடத்தில், தொகுப்புகளை விற்கும் தொழிலின் மொத்த மதிப்பு 170 கோடி டாலர் அளவை எட்டியது. முன்னாளில், ஒரு அரியப் பொருளின் விலையை மதிப்பீடு செய்யும் செயல்பாட்டை, பொய் மற்றும் பித்தலாட்டத்தின் மூலம் புதிய நிறுவனங்கள் மாற்றின. நினைவுத் தட்டுகளில் முதலீடுச் செய்பவர்களின் நடத்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டனர் - கடந்தக் காலச் செயல்திறன் வருங்காலச் செயல்திறனிற்கு வழிக்காட்டியாக இருக்கும், தங்களிடம் இருக்கும் பொருட்களுக்கு அதிக விலைக் கிடைக்கும், ஒரு விஷயத்தின் குறைகள் அறிந்தும் கும்பலின் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதுப் போன்றத் தவறான அனுமானங்கள் மூலம், மக்கள் தங்களின் பணத்தைத் தொகுப்புகளுக்கானப் பொருட்கள் விற்பவர்களிடம் விரயம் செய்தனர். இந்தப் பித்து, நாளிதழ்கள் பிரபலமானப் பிறகு அதிக அளவில் நிகழ ஆரம்பித்தன - விசாரணையின் மூலம் நாளிதழ்கள் உண்மையைக் காப்பவர்களாக தங்களைக் கருதினாலும், தங்களதுப் பிழைப்பிற்காக, தொகுப்புகளுக்காக மக்கள் கொள்முதல் செய்வதைப் பிரசுரம் செய்வதன் மூலம் தங்களது வருவாயை மேம்படுத்திக் கொண்டனர்.
டை வார்னர், பொம்மைகளின் விற்பனையாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அவரதுத் தந்தையும் டாகின் கம்பெனியில் பொம்மை விற்பனையாளராக இருந்ததினால் அவரால் இந்தத் துறையில் எளிதில் நுழைய முடிந்தது. பிற்காலத்தில், அவரதுத் தந்தை தனது மகளை (டை வார்னரின் தங்கை) பாலியல் பலாத்காரம் செய்தது வெளி வந்தது. டை வார்னரின் அம்மா, சித்தப்பிரமையால் மனச் சிதைவு அடைந்திருந்தார்.  பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகள், அமெரிக்கா-வில் உள்ளக் குழந்தைகளுக்குத் தங்களதுப் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்துத் வெளிவந்துத் தங்களின் சுதந்திரத்தை வளர்த்துக் கொள்ளும் ஊன்றுகோலாக இருக்கின்றன. அமெரிக்கா-வில் உள்ளக் குழந்தைகள், சிறு வயதிலேயே வயது முதிர்ந்தவர்கள் போல் தங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதால், இந்தப் பொம்மைகளுக்கு எந்நாளும் தேவை இருந்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் பொம்மைகளை விற்கும் நிறுவனங்கள், வெகுத் தீவிரமானப் போட்டியில் பங்கேற்பதால், தங்களது வாடிக்கையாளர்களின் நடத்தைகளை அவர்கள் அறியாத வகையில் தாக்கம் செய்ய முயல்கின்றனர். இது, வாடிக்கையாளர்களுக்குத் தங்களுடையப் பொருட்களை விற்கும் பல நிறுவனங்கள் செய்தாலும், பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகளை விற்கும் நிறுவனங்கள் அதிகப்படியாகவே இந்த யுக்திகளைக் கையாள்கின்றன. வெகு அதிகமாக பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகளை விற்பவர்கள், தங்களதுச் சொந்த வாழ்க்கையில், சிதைந்தக் குடும்பங்களில் வளர்ந்ததினால், இறுதி வரையில்  வேறுத் தொழிலுக்குச் செல்லாமல், அதேத் தொழிலில் இருக்கின்றனர். டாகின் நிறுவனத்தில் மிகச் சிறந்த விற்பனையாளர் என்றப் பெயரை டை வார்னர் பெற்றார். அங்குத் தனது வருங்காலத்திற்கு உதவும், விற்பனை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் - பொம்மைகளின் விவரங்களில் அதிகக் கவனம் செலுத்துதல், மலிவு விலை, அதிக எண்ணிக்கை மற்றும் சிறியக் கடைகளுக்கு விற்பனைச் செய்வது (மிகப் பெரியக் கடைகளைத் தவிர்ப்பது). டாகின் நிறுவனத்தில் பல வெற்றிகளைக் கண்டப் பின், அதன் வாடிக்கையாளர்களிடமேத் தனதுச் சொந்தத் தொழிலுக்கான முயற்சிகளைத் தொடக்கினார். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் இந்தச் செயலை அறிந்தவுடன், டாகின் நிறுவனம் டை வார்னரை வேலையில் இருந்து விலக்கியது. அவர் வேலை இழந்தப் பொழுது, அமெரிக்கா-வில் வேலையின்மை விகிதம் 13.5%-ஆக இருந்தது. பண வீக்கம் அதிக அளவில் இருந்தது. வெவ்வேறு தொழில் முயற்சிகளில் இறங்கித் தோல்வியுற்றப் பின், தனது நண்பர் பாட்ரீஷியா ரோச்சுடன் இணைந்துப் பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகளைத் தனதுச் சொந்தப் பெயரில் விற்கும் தொழிலில் இறங்கினார். அவரதுத் தந்தை மாரடைப்பினால் காலமானப் பிறகு, தனதுத் தந்தையின் விலைமதிப்புள்ள பழமையானத் தொகுப்புகளை தனதுக் குடும்பத்திற்குத் தெரியாமல் விற்றுத் தனதுத் தொழிலிற்கான விதைப் பணத்தைத் திரட்டினார். தனதுப் பெயரில் விற்கும் பொம்மைகள் தான் எதிர்ப்பார்க்கும் உயர்ந்தத் தரநிலையில் இருக்க வேண்டும் என்று நம்பினார். தனதுக் கடின உழைப்பாலும், பொம்மைகளை விற்கும் அலாதித் திறனாலும் மேலும் மேலும் வெற்றிகள் குவிந்தன. பிற்காலத்தில், தனது வெற்றிகளுக்குக் காரணமாக இருந்த உற்றார் உறவினர்களை அகற்றித் தன்னால் மட்டுமே அவை விளைந்தது என்றக் கருத்தில் உறுதியாக இருந்தார். தான் எதிர்ப்பார்க்கும் தரநிலை இருக்க வேண்டும் என்ற விடாப்பிடி எண்ணத்தால், அவரது நிறுவனம் உருவாக்கும் பொம்மைகளின் எண்ணிக்கைக்கு ஒரு உச்சக்கட்ட வரம்பு இருந்தது. பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகளை விற்கும் ஏனைய நிறுவனங்கள், பெரியக் கடைகளில் தங்களதுப் பொருட்களை வைக்க முயன்று வந்தனர். இதனால், தங்களதுப் பொருட்கள் கடைகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கும் அணுகுமுறைகளில் அதிகக் கட்டுப்பாடு இல்லாமல் தவித்தார்கள். பெரியக் கடைகளில் தனதுப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காததன் மூலம், டை வார்னர் இந்த இக்கட்டில் இருந்துத் தப்பினார். தன்னுடையப் பொம்மைகள் சிறியக் கடைகளில் தான் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று ஆணித்தரமாக நம்பியதால், அந்தக் கடைகளில் அவரதுப் பொம்மைகளுக்குப் பிரதான இடம் கிட்டியது. தனதுப் பொம்மைகளில் எண்ணிக்கையை விடத் தரத்தை முக்கியமாகக் கருதினார். டாகின் போன்ற நிறுவனங்கள் 650-இல் இருந்து 700 பொம்மைப் பதிப்புகளை விற்பனைச் செய்தப் பொழுது, டை நிறுவனம் 100 பொம்மைப் பதிப்புகளை விற்பனைச் செய்தது. தனது நிறுவனத்தின் பொம்மைகள் நிச்சயமாக விற்கும் என்ற நம்பிக்கையினால், தான் விற்கும் சிறியக் கடைகளிலிருந்துத் தனதுப் பொம்மைகளுக்கு உடனடிப் பணப் பட்டுவாடாவை உறுதியுடன் கோரினார். பஞ்சடைக்கப்பட்டப் பொம்மைகள் தொழிலில், பணப் பட்டுவாடாத் தீர்ப்பிற்கு 4 மாதக் கால அவகாசம் பரவலாக இருந்தது. தனதுப் பொம்மைகளை இரண்டு விலைகளில் - $5, $10 மட்டுமே விற்றார். மற்ற நிறுவனங்கள், அதிகப் பட்சம் 12 விலைகளில் தங்களதுப் பொம்மைகளை விற்றனர். தனதுப் பொம்மைகளை மீண்டும் மீண்டும் மாற்றிக் கொண்டே இருந்தார் - தனது எதிர்ப்பார்ப்பிற்கேற்றத் தரநிலையில் இருக்க வேண்டும் என்பதினால், பொம்மைகள் கடைகளுக்கு விற்கப்பட்டப் பின்னரும், அந்தப் பொம்மைகளின் வடிவமைப்பை மாற்றிக் கொண்டே இருந்தார். இவ்வாறுத், தனது நிறுவனத்தின் பொம்மைகளைத் தனதுக் கட்டுக்குள் வைத்திருந்ததுப் போல், தனதுச் சொந்த வாழ்க்கையிலும் தனதுக் குடும்பத்தாரைத் தனதுக் கட்டுக்குள் வைக்க முயற்சித்ததால், சில உறவுகள் முறிந்தன.
பீனிப் பேபிப் பொம்மையை டை வார்னர் நிறைய முயற்சிகளின் பலனாக உருவாக்கினார். அதுக் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பி அதை மெய்யாக்கத் தீவிரமாக முயன்றார். பீனிப் பேபிப் பொம்மைகளின் விற்பனை மூலம் தனது மற்றப் பொம்மைகளின் விற்பனையையும் அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தார். முதலில், பீனிப் பேபிப் பொம்மைகளை ஒருக் கட்டில் 12 என்றக் கணக்கில் சிறியக் கடைகளுக்கு விற்றார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே, ஒருக் கட்டிற்கு 6 என்றக் கணக்கில் விற்பனைச் செய்ய ஆரம்பித்தார். முதலில், அந்தப் பொம்மைகள் அதிக அளவில் விற்கவில்லை என்றாலும், 2 வருடங்கள் கழிந்தப் பிறகு, அவற்றின் விற்பனைச் சூடுப் பிடித்தது. ஆர்.பி.டி (ரிச் பெஃபோர் தெர்ட்டி) என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ப்ரையன், க்ரிஸ் மற்றும் கெவின் சகோதரர்கள் பீனிப் பேபிப் பொம்மைகளை "ஓய்வு" பெறச் செய்யும் யுக்தியை டை வார்னரிடம் பரிந்துரை செய்தனர் - அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரில் பொம்மைகளை விற்ற ஒரு வணிகர் அதைச் செய்து அதிக அளவில் பொம்மைகளை விற்றிருந்தார். வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்டப் பீனிப் பேபிப் பொம்மைகள் "ஓய்வு" செய்யப்பட்டன என்றுக் கூறியதன் மூலம், அந்தப் பொம்மைகளை தொகுப்புகளில் வைத்திருந்த வாடிக்கையாளர்கள், அவற்றின் பற்றாக்குறையை உணர்ந்து (அந்தப் பற்றாக்குறை வேண்டுமென்றே வணிகரால் இயற்றப்பட்டது என்றாலும்)  "ஓய்வு" பெறப் போகும் பொம்மைகளை மிக அதிக அளவில் கொள்முதல் செய்தனர். மேலும் அந்தப் பொம்மைகளை வாங்கித் தங்களதுத் தொகுப்புகளில் வைத்துக் கொள்வதற்குக் கூடுதலாகப் பணமும் செலவழித்தனர். முதலில், இவ்வாறுச் செய்வதில், டை வார்னருக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், அதுப் பீனிப் பேபிப் பொம்மைகளில், குழந்தைகளுக்கு நாட்டம் இல்லை என்றக் கருத்தை உறுதியாக்குவதுப் போல் அமைந்தது. சிலக் காலத்திற்குப் பிறகு, அந்த மூலோபாயத்தின் பலனை அறிந்தப் பிறகு அதற்கு ஒப்புக் கொண்டார் - "ஒய்வு" பெற்றப் பொம்மைகளின் அதிக விலைப் புதிதாக விற்கப்படும் பொம்மைகளின் தேவையையும் அதிகரிக்கும் என்று நம்பினார். இவ்வாறு, முதல் முதலில் "ஒய்வு" செய்யப்பட்டப் பொம்மை லவி தி லேம்ப். சில மாதங்களுக்கு முன் டை நிறுவனம் விற்கத் தொடங்கிய இளவரசி டயானாக் கரடிப் பொம்மையை "ஓய்வு" செய்தப் பின், ஒட்டு மொத்தமாக பீனிப் பேபிப் பொம்மைகளின் விற்பனைச் சூடுப் பிடிக்க ஆரம்பித்தது. பழைய இளவரசி டயானாக் கரடிப் பொம்மைகளின் விலை பல நூறு டாலர்களுக்கு எகிறியது. அதனைக் கண்டு, டை நிறுவனம், இளவரசி டயானாக் கரடிப் பொம்மையை அதிக எண்ணிக்கையில் மீண்டும் விற்க ஆரம்பித்ததில், அந்தப் பொம்மைப் பற்றாக்குறைத் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் அதன் விலைப் பழையப் பொம்மைகள் சந்தையில் சரிந்தது. 1996-ஆம் வருடத்தில், பீனிப் பேபிப் பொம்மைகள் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. பீனிப் பேபிப் பொம்மைகள் ஒருக் குழந்தையின் புத்தகப் பையில் வைக்கக் கூடிய அளவிற்குச் சிறியதாக இருந்ததால், அதன் விளையாட்டு மதிப்புக் குழந்தைகளிடத்தில் கூடியது (குறிப்பாக அமெரிக்கா-வின் மத்திய மேற்குப் பிராந்தியத்தில்) மட்டுமல்லாமல், வாய் வார்த்தையால் செய்யப்படும் விளம்பரத்திற்கு ஏற்றதாகவும் இருந்தது. மற்றச் சிலப் பீனிப் பேபிப் பொம்மைகளையும் "ஓய்வு" செய்ததால், அவற்றின் விலைப் பழையப் பொம்மைகள் சந்தையில் அதிகரித்தன. இந்தக் காலத்தில், அமெரிக்கத் தாய்மார்களிடையே, தங்கள் குழந்தைகளை விளையாட்டுப் பயிற்சிகளுக்கு இழுத்துச் செல்லும் 'ஸாக்கர் மாம்ஸ்' எனப்படும் பெண்களின் ஆதிக்கம் கலாச்சாரத்தில் வெகுவாகப் பரவியது. அமெரிக்கச் சமூகத்தில் வேலை மற்றும் வாழ்க்கையின் சமநிலையில் நிகழும் கஷ்டங்களை அகற்றுவதற்கு, பொருட்களில் பணத்தைச் செலவுச் செய்வது ஒருத் தீர்வாக இவர்களுக்கு அளிக்கப்பட்டது. குழந்தைகள் எப்போதும் செய்வதுப் போல், சிலக் காலத்திற்குப் பிறகுப் பீனிப் பேபிப் பொம்மைகளில் இருந்த நாட்டம் குன்றியது. அவர்களுக்குப் பதிலாக, அந்தக் குழந்தைகளின் தாய்மார்கள், அந்தப் பொம்மைகளின் தொகுப்புகளைச் சிரத்தையாக உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். பீனிப் பேபிப் பொம்மைகளின் வரலாற்றை அலசி ஆராய்ந்து அவற்றை முறையாக வகைப்படுத்துவதில் சிலர் அதிக முயற்சிகள் எடுத்தனர். அவ்வாறுச் செய்வது, டை நிறுவனம், ஒரேப் பீனிப் பேபிப் பொம்மைகளைப் பலப் பதிப்புகளில் விற்பனைச் செய்திருந்ததால் (டை வார்னர் தனது எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றத் தரநிலையில் அந்தப் பொம்மைகள் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக நம்பியதால்), கடினமாக இருந்தது. சிலப் பொம்மைக் கடைகளின் முதலாளிகள், இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். டை நிறுவனம், சிறியக் கடைகளுக்கு மட்டுமே விற்றதால், அவர்கள் பீனிப் பேபிப் பொம்மைகளின் பெருமைகளையும், பொம்மைகளின் "ஓய்வு" பற்றியும் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எடுத்துக் கூறினர். அதனால், பழையப் பொம்மைச் சந்தைகளில் ஒவ்வொருப் பொம்மையின் விலையை நிர்ணயிப்பதில் அதிக அளவுப் பங்காற்றினர். ரிச்சர்ட் கெர்னாடி என்றக் கடைக்காரர், "ஓய்வு" பெற்ற மற்றும் "ஓய்வு" பெறாதப் பொம்மைகளின் பட்டியலை வெளியிட்டார். இது, பீனிப் பேபிப் பொம்மைத் தொகுப்பாளர்களிடையே மொத்தத் தொகுப்பையும் சேமிக்க வேண்டும் என்ற ஆசையில், அந்தப் பொம்மைகளின் தேவையை மேலும் தூண்டியது. தொகுப்பாளர்களிடையில் இந்தப் பொம்மைகளின் தேவை அதிகமாக, பழையப் பொம்மைகலின் சந்தையில் விலையும் கூடியது. மிக நிதானமான முறையில் குழந்தைகளிடம் ஆர்வம் கூடியதால், பழையப் பொம்மைச் சந்தைகளில் செயல்படுபவர்கள் லாபம் செய்வதற்கு ஆதரவாகக், குறைந்த அளவிலேயே இந்தப் பொம்மைகள் விற்கப்பட்டன.  இந்தப் பொம்மைகளின் தொகுப்பாளர்கள் நாட்டில் எல்லா முக்குகளுக்கும் சென்று அங்குள்ளக் கடைகளில் கிடைக்கும் பீனிப் பேபிப் பொம்மைகளை வாங்கினர். அவர்களுக்குள்ளேயேப் பொம்மைகளைப் பரிமாற்றமும் செய்துக் கொண்டனர். "ஓய்வு" செய்யப்பட்டப் பொம்மை அரிதாகிவிட்டப்படியால் அவற்றை வாங்குவதற்காக அதிகப் பணம் செலவுச் செய்ய வேண்டியிருந்தது. முதலில் இருந்தேப் பீனிப் பேபிப் பொம்மைகளை வாங்கித் தொகுத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பொம்மைகளின் வரலாற்றையும் மதிப்பையும் சோதிக்கும் தொழிலில் இறங்கினர். மால்க்கம் க்ளாட்வெல் எழுதிய தி டிப்பிங்க் பாய்ண்ட் என்றப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதுப் போல், இவர்கள் பீனிப் பேபிப் பொம்மைகளில் இருந்தப் பித்தைப் பரப்பும் "மேவன்"-களாக செயல்பட்டனர். அதிக எண்ணிக்கையில் மக்கள் பீனிப் பேபிப் பொம்மைகளை வாங்கியதால், பழையப் பொம்மைகள் சந்தையில் அவற்றின் விலை மேலும் கூடியது. பீனிப் பேபிப் பொம்மைகளைப் பற்றியப் பத்திரிகைகளைச் சிலர் உருவாக்கி, அதன் மூலம் செல்வச் செழிப்படைந்தனர். இன்டர்நெட் காலத்திற்கு முன், இந்தப் பத்திரிகைகளும் புத்தகங்களும், பீனிப் பேபிப் பொம்மைகளின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரப்பூர்வத் தரகர்களாக அமைந்தன. முதலில், இந்தப் பொம்மைகளில் பித்தை ஆரம்பித்தவர்கள், அப்பொழுது அதை உணரவில்லை என்றாலும், அமெரிக்கா-வின் சிகாகோ நகரத்தில் ஒரு 10 மைல் பரப்பளவிற்குள் வாழ்ந்து வந்தனர். முதலில் இந்தப் பொம்மைகளைத் தொகுக்கத் தொடங்கியப் பொழுது, அதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டனர். அதன் அடித்தளமாக இருக்கும் உளவியலைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. டை நிறுவனம் சிறியக் கடைகளுக்கு விற்றுக் கொண்டிருந்ததால், குறைந்த அளவிலேயே அந்தப் பொம்மைகளின் எண்ணிக்கை இருந்தது. அதனால், அந்தப் பொம்மைகள் பற்றாக்குறையில் இருக்கின்றன என்று நம்பினர். இந்தப் பொம்மைகளில் உள்ளப் பித்துப் பரவப் பரவ, டை நிறுவனம், சிறியக் கடைகளுக்குக் குறைந்த அளவில் பொம்மைகளை விற்பனைச் செய்து, பிரம்மாண்டமான அளவு லாபம் செய்வதற்கான வாய்ப்பைக் கண்டறிந்து அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. 1998-ஆம் வருடத்தின் நடுவில், ஒரு நியூ ஃபேஸ் டெட்டி பேர் எனப்படும் பொம்மை, பழையப் பொம்மைகளின் சந்தையில் 2,000 டாலருக்கு விற்பனையானது(அதை விற்றவர்கள், அந்தப் பொம்மையை 25 டாலருக்கு வாங்கியிருந்தனர்). முதலில் இந்தப் பொம்மைகளைத் தொகுப்பதில் ஆர்வம் காட்டியவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்களிடம் இருந்த அரியப் பீனிப் பேபிப் பொம்மைகளை நல்ல லாபத்தில் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களில் சிலர், தங்களதுக் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பிற்கானச் செலவிற்காக இந்த லாபத்தைப் பயன்படுத்தினர். மனித உளவியலினால், தனது அண்டை அசலார் இவ்வாறுச் செல்வச் செழிப்படையும் பொழுது, மற்றவர்களுக்குப் பொறாமையும் பேராசையும் துளிர் விட்டன. தாங்களும், பழையப் பொம்மைகள் சந்தையில் சுபீட்சமான நேரத்தில் நுழைந்தால், தாங்களும் (பங்குச் சந்தை வணிகர்கள் மற்றும் சூதாடுபவர்கள் போல்) செல்வச் செழிப்பு அடைய முடியும் என்றுத் திடமாக நம்பினர். பழையப் பீனிப் பேபிப் பொம்மைகளின் அதிகாரப்பூர்வமாக உண்மையான விலையை நிர்ணயிக்க எவரும் இல்லாததால், அவரவர் தத்தம் உணர்வுகளை இந்தப் பொம்மைகளின் விலையின் மேல் செலுத்தினர். ஒருப் பொருள் உண்மையிலேயே மிக நல்லப் பேரத்தில் கிடைக்கிறது என்பதுப் பொதுவாக நல்லதாக அமையாது என்ற அடைமொழியைப் புறக்கணித்து இதர மக்கள் அதிகப் பணம் கொடுத்துத் தாங்களும் கூட்டத்தோடுக் கூட்டமாக இந்தப் பொம்மைகளின் வணிகத்தில் இறங்கினர். இந்தப் பித்து மேலும் மேலும் வளருவதில் ஆர்வம் கொண்டவர்கள், தங்களதுச் செல்வச் செழிப்பு, இந்தப் பீனிப் பேபிப் பொம்மைகளில் முதலீடுச் செய்ததினால் வந்தது என்றுக் கொக்கரித்தனர். 1996-ஆம் வருட இறுதியில், டை நிறுவனத்தின் வருவாய், 28 கோடி டாலரை எட்டியது. டை வார்னர், வெவ்வேறுக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள பீனிப் பேபிப் பொம்மைகளில் எவை நன்றாக விற்கவில்லையோ, அவற்றின் "ஓய்வு" அறிவிப்பைப் பறைச்சாற்றினார்.  "ஓய்வு" அறிவிப்புச் செய்யப்பட்டப் பொம்மைகளை, டை நிறுவனம் உடனடியாகக் கடைகளுக்கு அனுப்புவதை நிறுத்தியது. இதனால், பழையப் பீனிப் பேபிப் பொம்மைகளின் சந்தையில் விலை அதிகரித்தாலும், டை நிறுவனத்தின் கிடங்குகளில் அதிக அளவில் குவிய ஆரம்பித்தன.
இன்டர்நெட்டின் வளர்ச்சியால், பீனிப் பேபிப் பொம்மைகளில் இருந்தப் பித்து மேலும் அதிகரித்தது. டை நிறுவனத்தில் மணிக் கூலிக்கு வேலைப் பார்த்த லீனா ட்ரிவேடி என்பவர், டை நிறுவனத்திற்கு ஒரு இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்றக் கோரிக்கை ஆமோதிக்கப்பட்டப்பின், அந்த இணையத் தளத்தை இயற்றினார். இன்டர்நெட்டில் உள்ள தகவல் பலகைகளிலும், அரட்டை அறைகளிலும் ஏற்கனவேப் பீனிப் பேபிப் பொம்மைகளின் தொகுப்பாளர்கள் தங்களுக்குத் தெரிந்த நுணுக்கங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். டை டாட்காம் பேரைப் பதிவுச் செய்ய முற்படும் பொழுது, கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒருவர் தனது மகன் டையின் பேரில் இணையத்தளம் உருவாக்கியிருப்பதை அறிந்தவுடன், டை வார்னர் அந்த நபருக்கு 150,000 டாலர் ஈடாக அளித்து, டை டாட்காம் பெயரைத் தன் நிறுவனத்திற்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டார். டை டாட்காம் இணையத் தளத்தைப், பீனிப் பேபிப் பொம்மைகளைப் பற்றியத் தகவல்களின் அதிகாரப்பூர்வ மையமாக உருவாக்கினார். மேலும், பீனிப் பேபிப் பொம்மைகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்குப் பிடித்தப் பொம்மைகளைப் பற்றியும் அவர்களுக்கு டை நிறுவனத்தைப் பற்றியத் தேவையானத் தகவல்களையும் அளித்தார். தொகுப்பாளர்கள், டை டாட்காம் இணையத்தளத்தை வெறியுடன் கண்காணித்து, அதன் மூலம் புதிதாக் "ஓய்வு" பெறும் பொம்மைகள் பற்றியத் தகவல்களை அறிய முற்பட்டனர். பீனிப் பேபிப் பொம்மைகளின் விலை ஏறுமுகத்தில் இருந்ததால், தொகுப்பாளர்கள், அந்த விலை எப்பொழுதும் ஏறிக் கொண்டே இருக்கும் என்றுத் திடமாக நம்பினர். 1997-ஆம் வருட ஆரம்பத்தில், பீனிப் பேபிப் பொம்மைகள் ஈபே இணையத் தளத்தில் (இது 1995 வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது) பொம்மைகளிடையே முதன்மை இடத்தை அடைந்தது. புதிதாக ஆரம்பித்த ஈபே இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு, பீனிப் பேபிப் பொம்மைகளின் மேல் இருந்தப் பித்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது - ஈபேயின் வருடாந்திர அறிக்கையில், பீனிப் பேபிப் பொம்மைகளின் உதவி, ஈபேயின் வருங்கால வளர்ச்சிக்கு ஒரு ஆபத்து விளைவிக்கும் காரணியாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஏலத்தின் மூலம் பலப் பொருட்களை விற்கலாம். ஆனால், விலை மதிப்புக் கணிக்க முடியாதப் பொருட்களை ஏலத்தில் விற்பதும் வாங்குவதும் கடினம். மேலும், புதிதாக ஏலத்தில் பங்கேற்பவர்கள் வெற்றிப் பெறக் குறுகிய வாய்ப்புகளே உள்ளன. அவ்வாறு வெற்றிப் பெறுபவர்கள், வாங்கியப் பொருட்களுக்கு அதிக அளவில் பணம் செலவழிக்கின்றனர். இன்டர்நெட் மற்றும் ஈபே இணையதளத்தின் மூலம், ஏலத்தில் பங்கேற்பதற்கு ஒருக் கணிணி, ஒருச் சுட்டி மற்றும் ஒரு மோடம் மட்டுமேத் தேவையாக இருந்தது. டை நிறுவனத்துடன் தொடர்புக் கொள்ளப் பலமுறை முயன்றும், ஈபே நிறுவனத்தால் முடியவில்லை. தொகுப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் ஈபே இணையத் தளத்தைப் பழையப் பீனிப் பேபிப் பொம்மைகளின் விலை நிர்ணயிக்கும் இடமாகக் கருதினர். 5 டாலர் கொடுத்து வாங்கியப் பீனிப் பேபிப் பொம்மைகளின் மூலம் செல்வச் செழிப்பில் திளைப்பவர்களைப் பற்றியச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டதும், அதை நம்பி மேலும் பல வெகுளியான வாடிக்கையாளர்கள் ஆடுகளத்தில் குதித்தனர். 1988-ஆம் வருடம் செல்லச் செல்ல, வாடிக்கையாளர்கள், கடைகளுக்கும் வீடுகளுக்கும் பொம்மைகளைக் கொண்டுக் கொடுக்கும் தபால் வண்டிகளை மறிக்க ஆரம்பித்தனர். மேலும், பீனிப் பேபிப் பொம்மைகள் இருந்தக் கிடங்குகளில் இருந்துப் பலப் பொம்மைகளை, அங்கு வேலைச் செய்யும் தொழிலாளிகள் திருடி பழையப் பொம்மைகளின் சந்தையில் விற்றுப் பணம் பார்த்தனர். பீனிப் பேபிப் பொம்மைகளின் புகழைக் கண்டு, அதில் லாபம் செய்ய பலப் போலித் தயாரிப்பாளர்கள் களத்தில் குதித்தனர். டை நிறுவனம் தனதுப் பொம்மைகளின் பேரும் தரநிலையும் மக்களின் மனதில் கெட்டு விடக் கூடாது என்பதனால், போலித் தயாரிப்பாளர்கள் மேல் வழக்குகள் தொடுத்தது. டை வார்னர், பீனிப் பேபிப் பொம்மைகளின் பித்து உச்சக்கட்ட நிலையை அடைந்தாலும், அதனால் கிடங்குகளில் உருவான  வழங்கல் சிக்கல்களை நிவர்த்திச் செய்யாமல் இருந்தார்.  தான், அந்தப் பொம்மைகளின் கர்த்தா என்றுத் தன்னைக் கருதியதால், அந்தப் பொம்மைகளை விற்று லாபம் சம்பாதிப்பதில் ஏற்பட்டச் சிக்கல்களில் அவர் நாட்டம் காட்டவில்லை. அதன் விளைவாக, டை நிறுவனம், சிலப் பீனிப் பேபிப் பொம்மைகளைச் சிறிய அளவில் உற்பத்திச் செய்துக் கடைகளுக்கு விற்றப் பின், அந்தப் பொம்மைகளின் விலை பழையப் பொம்மைகளின் சந்தையில் விலை ஏறியது.  விலை அதிகரிப்பதைக் கண்டத் தொகுப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் உடனடியாக அந்தப் பொம்மைகளை வாங்கிக் குவித்தனர். ஆனால், சில நாட்கள் சென்றப் பின், டை நிறுவனம் அதேப் பொம்மைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிக் கடைகளுக்கு அனுப்பியது. இதனால், அந்தப் பொம்மைகளின் பற்றாக்குறைத் தீர்ந்து, பழையப் பொம்மைகள் சந்தையில் அவற்றின் விலையும் குறைந்தது. இதனால், லாபத்தை நம்பி முதலில் வாங்கியத் தொகுப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் அதிக அளவில் நஷ்டம் கண்டனர். இந்தப் பொம்மைகள், சிறுவர் சிறுமியர் கையில் வைத்து விளையாட வேண்டியப் பொருட்கள் என்ற உண்மைத் தொகுப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறவே மறந்துப் போனது.
புதிய நூற்றாண்டின் பிறப்பு நெருங்கி வரும் நேரத்தில், பீனிப் பேபிப் பொம்மைகள் பற்றிப் பிரசுரிக்கப்பட்டப் புத்தகங்கள் இந்தப் பித்தை மேலும் சூடாக்கின. இந்தப் பொம்மைகளின் விலைப் பட்டியலைப் பிரசுரிப்பதன் மூலம் மக்களுக்கு அதிகாரப்பூர்வமானத் தகவலை அளிக்க வேண்டிய இந்தப் புத்தகங்கள், அந்தப் பொம்மைகளின் பித்தை மேலும் சூடேற்ற உதவின. இந்தப் பொம்மைகளில் உள்ளப் பித்தைச் சூடாக்க இந்தப் புத்தகங்களுக்கு மற்றும் ஒரு உள்நோக்கம் இருந்தது - இந்தப் பொம்மைகளின் விலை ஏறிக் கொண்டே இருக்கும் வரைத் தான் இந்தப் புத்தகங்களுக்கு மவுசு இருக்கும். இந்தப் பொம்மைகளின் விலைக் குறைய ஆரம்பித்தால், தங்களுடைய நஷ்டத்தைக் கணிக்கப் புத்தகங்களை வாடிக்கையாளர்கள் வாங்க மாட்டார்கள். அதே நேரத்தில், டௌ பங்குச் சந்தை, 36,000 புள்ளிகளைக் கடந்து விடும் என்று அடித்துக் கூறியப் புத்தகங்களைப் போல், பீனிப் பேபிப் பொம்மைகள் வருங்காலத்திலும் அதிக லாபத்திற்கு விற்கும் என்று வாடிக்கையாளர்கள் முன் ஆசைக் காட்டினர்.  இந்தப் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கையைக் கருதி, மதிப்பு வாய்ந்த நாளிதழ்களான நியூ யார்க் டைம்ஸ் மற்றும் யூ.எஸ்.ஏ டூடே அவற்றைத் தங்களது சிறந்த விற்பனைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டன. அதிக அளவில் பீனிப் பேபிப் பொம்மைகளின் தயாரிப்புச் சீனா-வில் கைத் தொழிலினால் செய்யப்பட்டதால், உடனடியாக அதிக எண்ணிக்கையில் உற்பத்திச் செய்வதுக் கடினமாக இருந்தது. பல நிறுவனங்கள் டை நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தம் செய்யக் கோரினாலும், டை வார்னர் அதை எல்லாம் மறுத்தார். இறுதியில், மெக்டோனால்ட்ஸுடன் இணைந்து அவர்கள் விற்கும் உணவுப் பொருட்களுடன் டீனிப் பீனிப் பேபிப் பொம்மைகளை விற்கும் ஒப்பந்தத்திற்குத் தனது ஒப்புதலை அளித்தார். ஆனால், மெக்டோனால்ட்ஸ் எதிர்ப்பார்த்த அளவுப் பொம்மைகளை உற்பத்திச் செய்வதில் தடைகள் இருந்ததால், அவற்றைச் சரிக்கட்டாமல், மெக்டோனால்ட்ஸ் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொழுது பொம்மைகள் இல்லை என்றுச் சொல்ல வேண்டிய நிலைமை வந்தது(சில வாடிக்கையாளர்கள், பீனிப் பேபிப் பொம்மைகள் வாங்க வேண்டும் என்ற வெறியில், அதிக அளவில் உணவுப் பொட்டலங்களை மெக்டோனால்ட்ஸில் வாங்கி, உணவை உண்ணாமல், பொம்மைகளை மட்டும் வாங்கிச் சென்றனர்). இதனால், மெக்டோனால்ட்ஸ், தனது வாடிக்கையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது. இந்த ஒப்பந்தம் சில நாட்களே ஓடியது என்பதனால், அதில் கொடுக்கப்பட்ட டீனிப் பீனிப் பேபிப் பொம்மைகள் பழையப் பொம்மைகள் சந்தையில் அதிக விலைக்கு விற்க ஆரம்பித்தன. ஊடகங்கள் அளித்த ஊக்கத்தினால், இந்தப் பொம்மைகளின் விலைப் பன்மடங்கு அதிகரித்தது. அதன் பிறகு, டை நிறுவனம், பேஸ்பால் விளையாட்டின் அதிகார ஸ்தாபனத்துடன் உரிம ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வெற்றிகரமாக அதனை முடித்துக் கொடுத்தது. இந்த முறை, தயாரிக்க வேண்டியப் பொம்மைகள் பல ஆயிரக் கணக்கில் இருந்ததால், டை நிறுவனத்தினால் தாக்குப்பிடிக்க முடிந்தது. பீனிப் பேபிப் பொம்மைகளின் பித்து குறையாமல் சூடாகிக் கொண்டிருந்த நிலையில், சிலப் பெற்றோர்கள் தங்களதுக் குழந்தகளிடன் இருந்தப் பொம்மைகளைப் பழையச் சந்தையில் விற்றுப் பணம் பார்க்கும் கதைகளும் வெளிவரத் தொடங்கின. 1998-ஆம் வருடம் மார்ச் மாதத்தில், பழையப் பொம்மைகளின் சந்தையில், பீனிப் பேபிப் பொம்மைகள் ஒன்றுக்கு பல நூறு டாலர் வீதம் விற்றுக் கொண்டிருந்தன. இந்தப் பொம்மைகளின் விலையைக் கண்டு அதில் லாபம் செய்ய மேலும் பல மக்கள் இந்தக் குட்டைக்குள் குதித்தனர். 1998-ஆம் வருடம் ஜூன் மாதத்தில், பீனிப் பேபிப் பொம்மைகளின் விலை, பழையப் பொம்மைகளின் சந்தையில் 1,000 டாலரைக் கடந்தது. 1998-ஆம் வருடத்தில், டை நிறுவனத்தின் வருவாய் 130 கோடி டாலராக இருந்தது.
1999-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், பீனிப் பேபிப் பொம்மைகளின் மீது இருந்தப் பித்துக் குறையும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன - முன்பு டை நிறுவனம் பொம்மைகளை "ஓய்வு" செய்தப் பொழுது, அவற்றின் மதிப்பு, பழையப் பொம்மைகளின் சந்தையில் அவற்றின் விலை வெகுவாக அதிகரித்தது. இந்த முறை, விலை அதிகரிப்புக் குறைவாகவே இருந்தது. ஈபே இணையத் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களும் தொகுப்பாளர்களும் பழையப் பொம்மைகளின் சந்தையில் பொம்மைகளின் விலையை எளிதாக அறிந்துக் கொள்ள முடிந்தது. இதனால், பொம்மைகளின் விலையைக் கண்டுப்பிடிப்பதற்காக இருந்தப் பத்திரிகைகளின் தேவை வெகுவாகக் குறைந்தது. டை நிறுவனம் பொம்மைகளின் தயாரிப்பு எண்ணிக்கையைக் கூட்டியதால், பொம்மைகளின் விலை பழையப் பொம்மைகளின் சந்தையில் விலை குறைந்தது. புதிதாக வெளிவந்திருந்த போக்கிமான் பொம்மையைக் குழந்தைகள் அதிக அளவில் வாங்க ஆரம்பித்தனர். இதனால், பீனிப் பேபிப் பொம்மைகளுக்குக் குழந்தைகளிடையே இருந்த மவுசு அறவே ஒழிந்தது. 1999-ஆம் வருட ஆரம்பத்தில், பீனிப் பேபிப் பொம்மைகளை 100 சதவிகிதம் பழையப் பொம்மைகளின் சந்தையில் விற்க முயற்சிச் செய்யும் வணிகர்கள் மட்டுமே வாங்கிய நிலைமை ஏற்பட்டது. பீனிப் பேபிப் பொம்மைகளினால் கிடைக்கும் லாபத்தினால் வரும் பேராசையினால், சிலக் கொலைகள் நடந்ததாகச் செய்திகளும் வெளிவந்தன. டை நிறுவனம் நெடுங்காலமாக, பீனிப் பேபிப் பொம்மைகளுக்குப் பிறகு வரும் தந்து எதிர்க்காலத்திற்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது.  தொகுப்பாளர்களும், வாடிக்கையாளர்களும் அவ்வாறுத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்கா மட்டுமின்றி, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் பீனிப் பேபிப் பொம்மைகளின் விற்பனை மூலம் டை நிறுவனம் அதிக லாபம் சம்பாதித்தது. பீனிப் பேபிப் பொம்மைகளின் பித்து வெகுவாகக் குறைந்தவுடன், வாடிக்கையாளர்களிடமும் தொகுப்பாளர்களிடமும் அதிக அளவில் விற்க முடியாதப் பழையப் பொம்மைகள் எஞ்சியிருந்தன. அவற்றிற்கு பல ஆயிரம் டாலர்கள் கொடுத்திருந்தாலும்,  அவற்றை விற்றால், சில நூறு டாலர்களேக் கிடைக்கும் நிலைமை உருவானது. தங்களிடம் இருக்கும் பீனிப் பேபிப் பொம்மைகளை விற்க முயன்றப் பொழுது, மற்றத் தொகுப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் அவர்களுடையப் பொம்மைகளைச் சந்தையில் விற்க முயற்சித்ததால், அந்தப் பொம்மைகளின் விலைச் சரிந்தது. மேலும், டை நிறுவனம் தனதுக் கிடங்குகளில் "ஓய்வு" செய்தப் பொம்மைகளையும் விற்க முயன்றதால், பொம்மைகளின் விலை அடிமட்டத்தை அடைந்தது. 1999-ஆம் வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி அனைத்துப் பீனிப் பேபிப் பொம்மைகளும் "ஓய்வு" செய்யப்படும் என்ற அறிவிப்பை டை நிறுவனம் பிரகடனப்படுத்தியது. அந்த அறிவிப்பு, சிறிதுக் காலத்திற்குப் பழையப் பொம்மைகளின் சந்தையில் விலையைக் கூட்டியது. ஆனால், டிசம்பர் மாதம் வந்தவுடன், டை நிறுவனம் தனது அறிவிப்பைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, பீனிப் பேபிப் பொம்மைகளின் தலையெழுத்தை வாடிக்கையாளர்களின் கையில் விட்டு விடப் போகிறோம் என்று அறிவித்தது. தங்களது வாக்குகளின் மூலம், பீனிப் பேபிப் பொம்மைகளைப் புழக்கத்தில் வைத்திருக்குமாறு வாடிக்கையாளர்கள் முடிவெடுத்தாலும், அந்தப் பொம்மைகளின் மேல் இருந்த மோகம் தணிந்திருந்தது. இந்தப் பொம்மைகளின் மீதுள்ளப் பித்துக் குறைந்தாலும், அந்த நடப்புகளில் தங்களதுப் பங்கை அலச வாடிக்கையாளர்களும் தொகுப்பாளர்களும் முன்வரவில்லை - அவர்களைப் பொறுத்தமட்டில், டை நிறுவனம் எல்லாப் பொம்மைகளையும் "ஓய்வு" செய்யப் போகிறோம் என்ற அறிக்கையை வெளிவிடாமல் இருந்திருந்தால், அந்தப் பொம்மைகளின் விலை அதிகமாகவே இருந்திருக்கும் என்றுத் திடமாக நம்பினர். ஒரு 5 டாலர் பொம்மைக்கு 1,000 டாலர்கள் செலவழிக்கத் தயாராக இருந்தத் தங்களதுப் பித்தினை அவர்கள் தவறாக எண்ணவில்லை. 2000-ஆம் வருடத்தில், பழையப் பொம்மைகளின் சந்தையிலும் 5 டாலருக்குப் பொம்மைகள் விற்றன. டை நிறுவனம் மீண்டும் பீனிப் பேபிப் பொம்மைகளின் பித்தை உருவாக்கச் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. டை வார்னரும் பீனிப் பேபிப் பொம்மைகளை விற்பதை விட்டுவிட்டு உயர்தர விடுதிகளை அழகுப்படுத்தும் தொழிலில் இறங்கினார். பீனிப் பேபிப் பொம்மைகளின் பித்தினால், டை வார்னர் கோடீஸ்வரர் ஆனார். இன்றையக் காலத்தில், டை நிறுவனம் பலப் பொம்மைகளை விற்றாலும், அவை மற்ற நிறுவனங்களின் பொம்மைகளைப் போல் சாதாரண அளவில் விற்கின்றன. டை நிறுவனம், தனது வருவாயை மேம்படுத்த, தனதுப் பொம்மைகளின் உரிமத்திற்கு மற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி அளிக்க ஆரம்பித்தது. வருமான வரிக் கட்டாமல் இருந்தக் குற்றத்திற்காக டை வார்னர் மீது அமெரிக்கா-வின் வருமான வரித் துறைக் குற்ற நடவடிக்கைகளைக் கொண்டு வந்தது. நீதிமன்றத்தில், அவரதுக் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டாலும், நீதிபதி வெகுக் குறைவானத் தண்டனையை அளித்தார் - 500 மணி நேரம் பொது நலத் தொண்டு மற்றும் இரண்டு வருடம் நீதிமன்றத்தின் கண்காணிப்பு.
சிலப் பொருட்களில் நிகழும் பித்துக்கள், அவற்றின் முடிவிற்குப் பின், நாட்டிற்கும் உலகிற்கும் வேண்டிய நலன்களை அளிக்கின்றன என்றுச் சிலப் பொருளாதார நிபுணர்கள் வாதாடுகின்றனர் - இன்டர்நெட்டில் உள்ளப் நிறுவனங்களின் பங்குச் சந்தைப் பித்து, அதிக அளவில் பொருளாதாரச் சேதத்தை விளைவித்தாலும், அதன் பலனாக உலகமெங்கும் இன்று இன்டர்நெட்டைப் படிக்கும் வசதியை அளித்திருக்கிறது. பீனிப் பேபிப் பொம்மைகளின் பித்தினால், டாலர் பொம்மைகளைச் சேகரித்ததுத் தான் எஞ்சியது - அந்தப் பொம்மைகளை வைத்துக் குழந்தைகள் விளையாடுவதும் இல்லை, அவற்றை வாங்கியப் பெற்றோர்கள் அதை விற்க முடிவதும் இல்லை.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்தக் குறிப்புகள்:
ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் ஃபைனான்ஷியல் இஃபோரியா - ஜான் கென்னெத் கால்ப்ராய்த்
இர்ரேஷனல் எக்ஸ்யூபெரன்ஸ் - ராபர்ட் ஷில்லர்
மானியாஸ், பானிக்ஸ் ஆண்ட் க்ராஷெஸ்: ஏ ஹிஸ்டரி ஆஃப் ஃபைனான்ஷியல் க்ரைஸிஸ் - சார்லஸ் கின்டில்பெர்கெர்
தி டிப்பிங்க் பாயிண்ட் - மால்க்கம் க்ளாட்வெல்
மேட் டு ஸ்டிக்: வை ஸம் ஐடியாஸ் ஸர்வைவ் அண்ட் அதர்ஸ் டை - சிப் ஹீத் அண்ட் டான் ஹீத்
கன்டேஜியஸ்: வை திங்க்ஸ் கெட்ச் ஆண் - ஜோனா பெர்கெர்

No comments: