பங்காளிச் சண்டை

சுருக்கம்:
இந்தப் புத்தகம், இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் பங்கை இந்திய விடுதலை இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கிறது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில், ராயல் இந்திய ராணுவத்தில் 194373 வீரர்களும், ராயல் இந்திய விமானப் படையில் 285 வீரர்களும், ராயல் இந்தியக் கடற்படையில் 1846 மாலுமிகளும் இருந்தனர். இரண்டாம் உலகப் போர் முடியும் பொழுது, ராயல் இந்திய ராணுவத்தில் 2,065,554 வீரர்களும், ராயல் இந்திய விமானப் படையில் 29201 வீரர்களும்  ராயல் இந்தியக் கடற்படையில் 30748 மாலுமிகளும் இருந்தனர். அந்தப் போரில் பணியாற்றிய 25 லட்சம் வீரர்களில், கிட்டத்தட்ட 90000 பேர் தீவிர காயம் அல்லது மரணம் அடைந்தனர்.
3 செப்டம்பர் 1939-இல், இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ, இந்திய அரசியல் தலைவர்களிடம் ஆலோசிக்காமல், இந்தியா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கும் என்று அறிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் இந்திய வீரர்கள் பங்காற்றிய பல போர்களை ஆசிரியர் மிகுந்த விவரங்களோடு சித்தரித்திருக்கிறார்(ஸிதி பரானி, கஸ்ஸினோ, எல் அலமெய்ன், கோஹிமா, இம்ஃபால்). பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்ததால், இந்திய விடுதலை இயக்கத்தின் பல தலைவர்கள் - காந்தி, நேரு, படேல், ஜின்னா, போஸ், அம்பேத்கார், ஸவர்கார் பிரிட்டிஷ் ஆட்சியுடன் கொண்ட சமரசங்களை இந்தப் புத்தகம் கவர்கிறது. வின்ஸ்டன் சர்ச்சில், லியோ அமேரி மற்றும் லின்லித்கோ போன்ற தலைவர்கள், இந்திய மக்கள் மற்றும் பொருளாதாரத்தை பிரிட்டிஷ் நாட்டிற்குச் சாதகமாக போர்க்காலத்தில் வற்றாத வளமாகக் கருதியது கேலிச்சித்திரமாக இருந்தாலும் ஆச்சரியம் தரவில்லை. ஆனால், இந்திய ராணுவத்தை தயார் நிலையில் கொண்டு வந்து இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் உடைமைகளைப் பாதுகாக்கத் திணறுவது ஆச்சரியத்தைத் தருகிறது. பிரிட்டிஷ் தவிர மற்ற முக்கிய சக்திகளும் (அல்லெய்ஸ் அணியில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன், ஆக்ஸிஸ் அணியில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான்) இந்திய ராணுவ வீரர்களின் திறமையை இனவெறி காரணமாகத் தாழ்வாகக் கருதுகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பங்கேற்றம், தெற்கு ஆசியவில் அதன் பின் நடந்த வரலாற்று நடவுகளை மிகவும் பாதித்திருக்கிறது (முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பு, இந்திய பாகிஸ்தான் பகிர்வு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடக்கும் போர்கள்).
அலசல்:
இந்திய விடுதலை இயக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போர்-இல் நேர்ந்த முக்கிய நிகழ்வுகள் நிறைய விவரங்களோடு சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
ஆகஸ்ட் 1939
ஐரோப்பாவின் ஆக்கிரமிப்பை வேகப்படுத்த ஜெர்மனி-இன் ஹிட்லர்-உம் சோவியத் யூனியன்-இன் ஸ்டாலின்-உம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். அதன் விளைவாக, தனது இந்திய உடைமைகளின் பாதுகாப்பு நிலைக் கவலைக்கிடமாகி விடும் என்று பிரிட்டன் கருதியது. இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் மார்க்கமாக ஆக்கிரமிக்க சோவியத் யூனியன் எத்தனித்தால் அதனைத் தடுப்பதுக் கடினமாக இருக்கும் என்று பிரிட்டன் கவலைப்பட்டது. ஆக்ஸிஸ் அணியில் ஜப்பானை சேராமல் தடுப்பதற்கு, பர்மா சாலையை மூடியது. அதனால், ஜப்பானை எதிர்த்துப் போராடிய சீன தேசியவாதிகளின் போர் விநியோகங்கள் மிகவும் குறைந்தன.
செப்டெம்பர் 1939 - இந்தியாவின் வைஸ்ராய் லின்லித்கோ, இந்திய அரசியல் தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல், இந்தியா ஆக்ஸிஸ் அணியை எதிர்த்துப் போர் புரியும் என்று அறிவிக்கிறார். இந்தியாவில் காங்கிரஸ் தவிர மற்ற தலைவர்களுடன் பேசிய பிறகு 1935 கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா சட்டத்தின் கீழ் உள்ள கூட்டாட்சிய விதிகளை போர்க்காலத்தில் நிலுவையில் வைக்கிறார். இரண்டாம் உலகப் போர்க்காலம் முழுவதும், இதுவே பிரிட்டிஷ் அணுகுமுறையாக அமைகிறது. சர்ச்சில் மற்றும் லின்லித்கோ தங்களுக்கு வாய்ப்புக் கிட்டும் பொழுது, இந்திய விடுதலை இயக்கத்தின் மதசார்பற்றப் பிரதிநிதியாகச் செயல்பட்ட காங்கிரஸினை ஒதுக்கி இதர தலைவர்களுக்கு (அம்பேத்கார், ஸ்வர்கார், ஜின்னா, இதர ராஜ்யங்கள்) முன்னிடத்தை அளித்தது. இதன் விளைவாக, அந்தத் தலைவர்களும் இந்தியாவின் ஒருமித்த குரலாக காங்கிரஸ் இருக்கக் கூடாது என்றும் அவரவர் தொகுதிகளுக்கு அவற்றின் தலைவர்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். பிரிட்டிஷ் வெற்றிகரமாக பயன்படுத்திய இந்த பிரித்து ஆளும் அணுகுமுறையினால் இந்த தலைவர்கள் பிரிட்டிஷ் பக்கம் சாதகமாக வாதிட்டனர். போருக்காக ஆள் சேர்க்கும் பொழுது, பிரிட்டிஷ் போர் புரியும் சாதிகள் என்றக் கோட்பாட்டினை பயன்படுத்தினர் - சில சாதிகள் மற்றவர்களை விட போர்த் திறனில் சிறந்தவர்கள் என்பது இதன் கூறாகும். இதனால், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கூர்காக்கள் மற்றும் ராஜ்புத்கள் போன்றோரை இந்திய ராணுவப் படையில் சேர்த்தனர். ஆனால், இரண்டாம் உலகப் போரின் கூடிய மனிதவளத் தேவைகளினால், இந்த கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதுக் கடினமாக இருந்தது. அதனால், மற்ற சாதிகள் - தலித்கள் மற்றும் தெற்கிந்தியாவில் வாழும் மக்களையும் ராணுவப் படையில் சேர்த்தனர்.
ஜூலை 1940

  • காங்கிரஸ் தலைவரான ராஜாஜி, போருக்குப் பின் பிரிட்டன் இந்தியாவிற்கு சுய அரசாட்சி அளிப்பதாக இருந்தால், காங்கிரஸ் பிரிட்டிஷ்-இற்கு போர் உதவி அளிக்கும் என்ற சலுகையை, காந்தியின் இணக்கத்திற்கு (காந்தி, வாழ்வில் வன்முறையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்பதால், இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்காது என்ற நிலையை  காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று  கூறினார்) மாறாக 'பூனா ஆஃபர்' என்ற பெயரில் முன்வைத்தார். 
  • காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ், சிறையில் அடைக்கப் பட்டபின் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அதனால், வைஸ்ராய், அவரை வீட்டுச் சிறைக்கு மாற்ற உத்தரவிடுகிறார்.

ஆகஸ்ட் 1940
லின்லித்கோ, காங்கிரஸ்-இன் 'பூனா ஆஃபர்'-ஐ மறுத்து, அதே சமயத்தில் தனது நிர்வாகக் குழுவின் விரிவாக்கலில், இந்தியாவின் அரசியல் கட்சிகள் நியமனம் செய்யும் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்வதாகவும் போர்க்கால நடவடிக்கைகளுக்குக்காக போர் ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பதாகவும் உறுதி அளிக்கிறார். இதனை அடுத்து, காங்கிரஸில் காந்தியின் கை இரண்டாம் உலகப் போர் முடியும் வரை வலுவடைகிறது.
அக்டோபர் 1940
காந்தி தனது சீடரான வினோபா பாவே-வை பிரிட்டிஷ் சட்டத்தை மீற நியமிக்கிறார். அதன்படி, 'பிரிட்டிஷ்-இன் போர் முயற்சிக்கு மக்கள் அல்லது பண உதவி செய்வது தவறு' என்று கூறி வினோபா பாவே குடிமை கீழ்படாமலிருத்தல் இயக்கத்தைத் தொடங்குகிறார். இதனை அடுத்து, பிரிட்டிஷ், அனைத்து மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் சிறையில் அடைக்கிறது.  காங்கிரஸ் தலைமை அல்லாத அரசியல் சூழ்நிலையை முஸ்லிம் லீக் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனது அமைப்புத் திறனை மிகைப்படுத்திக் கொள்கிறது. 1937-இல் நடந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்த பிராந்தியங்களில் காங்கிரஸிற்குப் பின் வந்ததால், முஸ்லிம் லீக் அதிர்ச்சி அடைந்திருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் ஒரே பிரதிநிதியாகத் தன்னை வளர்த்துக் கொண்டது.
ஜனவரி 1941
கல்கத்தா வீட்டுச் சிறையில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து பெஷாவர் சென்று அங்கிருந்து 'ஒர்லாண்டோ மஸ்ஸோட்டா' என்ற பெயரில் இத்தாலியக் கடவுச்சீட்டில் ஜெர்மனி-இல் இறங்குகிறார்.
மார்ச் 1941
போருக்கான பொருளாதார உதவியை அமெரிக்கா இந்தியாவிற்கு 'லெண்ட் லீஸ் ஸிஸ்டம்' மூலம் அளிக்கிறது. இதனை பயன்படுத்தி, ராணுவத் தளவாடங்கள் மற்றும் போருக்கான ஆயத்தங்கள் இந்தியாவில் செய்யப்படுகின்றன.
ஆகஸ்ட் 1941
அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டெலெனோ ரூஸ்வெல்ட்  சர்ச்சில்-உடன் இணைந்து 'அட்லாண்டிக் சார்டர்'-ஐ அறிவிக்கிறார். அமெரிக்காவின் உதவியுடன் இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டன் தனது ஏகாதிபத்தியத்தில் உள்ள உடைமைகளை தக்க வைக்க முயற்படும் என்று எதிர்பார்த்தால் அந்த நிலைமை உருவாவதற்கு முன்பே சர்ச்சில்-இடம் பிரிட்டன்-இன் உடைமைகளுக்கு அட்லெண்டிக் சார்டர் மூலம் விடுதலை அளிக்குமாறு வலியுறுத்துகிறார்.
செப்டெம்பர் 1941
சர்ச்சில், எஃப்.டி,ஆர்-இன் இணக்கத்திற்கு எதிராக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள உடைமைகளுக்கு அட்லெண்டிக் சார்டர் பொருந்தாது என்று கூறி தனது மறுப்புக்கு இணங்கக் கூடிய வகையில் எஃப்.டி.ஆர் உடன் வெளியிட்ட அறிவிப்பை மாற்றுகிறார்.
ஜூன் 1941
ஆபரேஷன் பர்பரோஸ்ஸா என்ற பெயரில் சோவியத் யூனியன்-இன் மேல் ஜெர்மனி போர் தொடுக்கிறது. ஹிட்லர், தனது வெளியுறவுத் துறை அமைச்சர் ரிப்பன்ட்ராப்-இன் கோரிக்கைகளுக்கு மாறாக, சோவியத் யூனியனை போரில் வீழ்த்திய பின், பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தை இந்தியாவில் எதிர்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார். ஹிட்லரின் கணிப்பில், சோவியத் யூனியன்-ஐ தோற்கடித்தப் பிறகு, ஜெர்மனி-இன் பலத்திற்கு அஞ்சி பிரிட்டன் சமரசப் பேச்சுவார்த்தை கோறும் என்று நம்புகிறார். ஜெர்மனியின் இந்த செயலினால், இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் பிரிட்டனை எதிர்ப்பதில் (ஜெர்மெனி-யும் சோவியத் யூனியன்-உம் ஒரே அணியில் இருந்த பொழுது) இருந்து பிரிட்டனுக்குச் சாதகமாக (ஜெர்மனி சோவியத் யூனியன்-ஐ ஆக்கிரமித்த பொழுது) செயல்படுகின்றனர்.
டிசம்பர் 1941

  • பிரிட்டிஷ் அரசு, காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கிறது.
  • அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் குண்டு வீசுகிறது. இதனால், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் அல்லெய்ஸ் அணி பக்கம் நுழைகிறது. 
  • ஹாங்காங்க் மற்றும் மலாயா-வில் பிரிட்டிஷ் தலைமையில் உள்ள இந்திய ராணுவத்தைத் தோற்கடித்து, ஜப்பான் அந்த இரு நாடுகளையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது.  இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான ஜெனரல் ஆர்சிபால்ட் வேவல், ஜப்பான்-இன் சக்தியை  மிகக் குறைவாக மதிப்பிடுகிறார். இதற்கு, ஜப்பானிய வீரர்கள் போரில் தாழ்வானவர்கள் என்ற அவரது இனவெறி அடங்கிய  நோக்கமே காரணம். மேலும், இந்திய ராணுவத்தின் சில பிரிவுகள் மத்திய கிழக்கு-இலிருந்து ஹாங்காங்க் மற்றும் மலாயா-விற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பயிற்சி ஏதும் இன்றி, போருக்குள் தள்ளப்பட்டதினால், பாலைவனத்தில் போரிடும் அனுபவத்தை காடுகளில் செயல்படுத்தத் தடுமாறின. 
  • முகம்மது இக்பால் ஷெடாய் தலைமையில் சுதந்திர இந்தியப் படையணி, ஜெர்மனி மற்றும் இத்தாலி உதவியுடன் உருவெடுக்கிறது. பிப்ரவர் 1943-இல் உச்சக்கட்டமாக, 2000 வீரர்கள் அதில் இருந்தனர். 

ஜனவரி 1942
பர்மாவில் இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ) ஐ/14 பஞ்சாப் படைப்பிரிவு-இன் கேப்டன் மோகன் சிங் தலைமையில், ஜப்பான்-இன் ஆதரவோடு தொடங்கப்படுகிறது.
பிப்ரவரி 1942

  • பிரிட்டிஷ் தலைமையில் கீழ் இருந்த இந்திய ராணுவத்தைத் தோற்கடித்து, ஜப்பான்-இன் ராணுவம் சிங்கப்பூர்-ஐ ஆக்கிரமிக்கிறது.
  • சிங்கப்பூர்-இல் சரணடைந்த 45000 வீரர்களில், 20000 பேர் ஐ.என்.ஏ-வில் சேர்கின்றனர்.
  • காந்தியின் தலைமையில் போருக்கு உதவ மாட்டோம் என்ற காங்கிரஸ்-இன் நிலையை தளர்த்த சீன தேசியவாதிகளின் தலைவரான சீய்யாங்-கை ஷெக் அவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பு சாதகமாக முடியாததால், சீயாங்-கை ஷெக், நெரு மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தனது வாதங்களை அவர்கள் முன் வைக்கிறார். 

மார்ச் 1942

  • பர்மா-வின் தலைநகரமான ரங்கூன்-இல் பிரிட்டிஷ் தலைமையின் கீழ் இருந்த இந்திய ராணுவத்தை ஜப்பான்-இன் ராணுவம் தோற்கடிக்கிறது. இதனை அடுத்து, பர்மா சாலை மூடப்படுகிறது. இதனால், சீயாங்-கை ஷெக்-இன் சீன தேசியவாதப் படைகளுக்கான போர்ப்பொருள் விநியோகம் தடைப்படுகிறது. அந்த விநியோகங்களை கொண்டு சேர்ப்பதற்கு இமாலய மலைச் சாரலைத் தாண்ட வேண்டி வரும்.   மேலும், சீயாங்-கை ஷெக்-இன் படை ஜப்பான் உடன் போரிடுவதால், பஸிஃபிக் சமுத்திரத்தை சுற்றி நடக்கும் போரில் அமெரிக்கா-வின் கை ஓங்கி இருக்கும். அதை கருத்தில் வைத்துக் கொண்டு, அமெரிக்கா, பர்மா சாலையை திறக்க, ஜோஸப் ஸ்டில்வெல்-ஐ அனுப்பி பர்மா-வில் நடக்கும் போரை தனக்குச் சாதகமாகக் கொண்டு வர முயற்சி செய்கிறது.
  • அமெரிக்கா, இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதினால், சர்ச்சில், ஸர் ஸ்டாஃபோர்ட் க்ரிப்ஸ்-ஐ இந்தியாவிற்கு ஆட்சி பரிமாற்றத்தை ஆராய அனுப்புகிறார். இந்தியாவில் அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய பின், க்ரிப்ஸ் தனது பரிந்துரைகளை பிரகடனப்படுத்துகிறார். வைஸ்ராய்-இன் நிர்வாகக் குழு இந்தியாவின் சுய ஆட்சிக்குப் பொறுப்பேற்கும் என்று கூறுகிறார். காங்கிரஸ்-ஐப் பொறுத்தவரையில், நிர்வாகக் குழுவிற்கு, வைஸ்ராய் எடுக்கும் முடிவுகளை தள்ளுபடி செய்யும் சக்தி  அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடுகிறது. பிரிட்டிஷ் அரசு, வைஸ்ராய் எடுக்கும் முடிவுகள் இறுதியாக இருக்கும் என்று கூறுகிறது. அது மட்டுமின்றி, முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் இடையே உள்ள கருத்து வேறுபாட்டினால் க்ரிப்ஸ்-இன் பரிந்துரைகள் வீணாகின்றன. இதனால் சர்ச்சில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். க்ரிப்ஸ்-ஐ இந்தியாவிற்கு அனுப்பியதன் மூலம் அமெரிக்காவின் பார்வையில் பிரிட்டிஷ் தங்களது ஏகாதிபத்தியத்தில் சுய ஆட்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளனர் என்றும் இந்தியர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்ற தோற்றம் உருவாகும் என்று நம்பினார்.

ஏப்ரல் 1942
மதராஸ், வைஸாக், காகினாடா போன்ற இடங்களில் ஜப்பான் குண்டு வீசுகிறது.
ஆகஸ்ட் 1942
வெள்ளையனே வேளியேறு முழக்கத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. இதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர்களை பிரிட்டிஷ் அரசு சிறையில் அடைக்கிறது. அதனை, தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் லீக் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் தனது செல்வாக்கை மிகைப்படுத்துகிறது.
டிசம்பர் 1942
ஐ.என்.ஏ-வின் தலைமையிலிருந்து மோஹன் சிங் விலக்கப்பட்டு ஜப்பான் ராணுவத்தினால் சிறைப்படுத்தப்படுகிறார்.
ஜனவரி 1943
வங்காளத்தில் பஞ்சம் பரவுகிறது.
ஜூலை 1943
ஐ.என்.ஏ-வின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தலைவராகி, மலாய தமிழர்கள் உட்பட புதிய வீரர்களை அந்தப் படையில் சேர்க்கிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் தலைமைத் தளபதியான வேவல்,  பர்மா-வின் நிலப்பரப்பிற்கேற்ப  இந்திய ராணுவத்தின் இயந்திர நிலையை குறைத்து காடுகளில் லகுவாக செயல்படக்கூடிய இந்திய மெல்லிய படைப்பிரிவு ஒன்றை புதிதாக உருவாக்கினார். அவரும் ஸ்டில்வெல்-உம் இணைந்து கடினமான பயிற்சி அளித்தும் படைப்பிரிவுகளை மற்ற போர்க்களங்களுக்கு அனுப்பாமலும் இந்திய ராணுவத்தின் போர் தயாரிப்பு நிலையை மேம்படுத்தினர். இதனால், பின்வரும் இம்ஃபால் மற்றும் கொஹிமா-வில் நடந்த போர்களில் ஜப்பான் ராணுவத்தை இந்திய ராணுவம் தோற்கடித்தது.
அக்டோபர் 1943
தற்காலிக சுதந்திர இந்திய அரசை சுபாஷ் சந்திர போஸ் நிறுவிக்கிறார்.
ஜூலை 1944
கொஹிமா மற்றும் இம்ஃபால்-இல் நடந்த சண்டைகளில் ஐ.என்.ஏ படை நிறைய இழப்புகளைச் சந்திக்கிறது. அதன் பின், அதன் போர் தயாரிப்பு நிலை மோசமடைகிறது.
மே 1945
பர்மா-வின் தலைநகர் ரங்கூன்-ஐ இந்திய ராணுவம் மீண்டும் கைப்பற்றுகிறது.
ஜூன் 1945
சிம்லா-வில் இந்திய சுய ஆட்சிப் பற்றி அலசி ஆராய இந்திய அரசியல் கட்சிகளை, பிரிட்டிஷ் அரசுக் கூட்டுகிறது.
ஆகஸ்ட் 1945
இன்றைய காலத்தில் தாய்வான் நாட்டில் இருக்கும் ஃபார்மோஸா-வில் சுபாஷ் சந்திர போஸ்-இன் விமானம் விபத்துக்குள்ளாகி இறக்கிறார்.
பிப்ரவரி 1946
இந்திய கடல் படை மாலுமிகள், சாப்பாட்டின் தரக்குறைவு மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் இன வெறிப் போக்கைக் கண்டித்தும் ஹெச்.எம்.எஸ் தால்வார் கப்பலில் கலகத்தில் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா-வில் அமைதி காப்புப் பணிகளுக்காக இந்திய ராணுவம் அனுப்பப்படுகிறது.
மார்ச் 1946
லார்ட் பெதிக்-லாரன்ஸ், ஸ்டாஃபர்ட் க்ரிப்ஸ் மற்றும் ஏ.வி.அலெக்ஸாண்டர் அடங்கிய அமைச்சரவைக் குழு இந்தியாவிற்கு அரசாட்சிப் பரிமாற்றத்தை  ஆராய இந்தியா வருகிறது.
ஆகஸ்ட் 1946
பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைகளை மறுத்து முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அறிவித்ததன் பலனாக ஏற்பட்ட கலவரங்களில் கல்கத்தாவில் மட்டுமே 4000 பேர் இறக்கின்றனர்.
செப்டெம்பர் 1946
கம்யூனிஸ்டுகள் வங்காள மாகாணத்தில் பங்கு அறுவடை செய்பவர்களை ஆதரித்து தெபாகா இயக்கத்தைத் தொடங்குகின்றனர்.
அக்டோபர் 1946
புன்னப்ர வயலார் எழுச்சியின் காரணமாக 270 பேர் மரணமடைந்ததன் காரணமாக ட்ராவங்கோர் ராஜ்யம் இந்தியாவிலிருந்து பிரியும் எண்ணத்தைக் கைவிடுகிறது.
பிப்ரவரி 1947
வைஸ்ராய் ஆக லார்ட் மவுண்ட்பெட்டன்-ஐ நியமித்து, இந்தியாவிலிருந்து ஜூன் 1948-க்குள் வெளியேறி விடுவோம் என்று பிரிட்டன் அறிவிக்கிறது.
14 ஆகஸ்ட் 1947 - பாகிஸ்தான் சுதந்திரம் அடைகிறது
15 ஆகஸ்ட் 1947 - இந்தியா சுதந்திரம் அடைகிறது.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், பயிற்சி மற்றும் நிதிப் பற்றாக்குறையால் இந்திய ராணுவத்தின் போர் தயாரிப்பு நிலை மோசமான நிலைமையில் இருந்ததால், நிறைய இழப்புகளும் தோல்விகளும் நிகழ்ந்தன. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இந்த தோல்விகளால், பிரிட்டன் மட்டுமின்றி, போரில் பங்கேற்ற மற்ற நாடுகளும், இந்திய வீரர்களின் போர்த் திறமைகளைக் குறைவாக எடைபோட்டன. பின்னர் வந்த சண்டைகளில் இந்திய வீரர்கள் நன்றாக போரிட்டாலும், இந்த எண்ணம் கடைசி வரை மாறாமல் இருந்தது.பிரிட்டன், இந்தியவிலிருந்து தனது போர் தயாரிப்பு நிலைக்காக மக்கள் மற்றும் பொருளாதார உதவி மிகுந்த அளவில் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு செயல்பட்டாலும், போர் நிலைக்குத் தேவையான முதலீட்டைச் செய்யவில்லை. போரின் ஆரம்பத்தில், பிரிட்டன்-உம் இந்தியா-வும் கட்டணப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்திய ராணுவம் வெளிநாடுகளில் ஆற்றும் பணி மற்றும் இந்தியாவில் செய்யப்பட்ட ராணுவத் தளவாடங்களின் மதிப்பிற்கு சமமான கட்டணத்தை பிரிட்டன்  தன்னுடைய வங்கிகளில் ஸ்டெர்லிங் கணக்கு ஒன்றில் கட்டி விட வேண்டும் என்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கான கட்டணத்தை இந்தியாவிலிருந்து ஈடுகட்ட வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதனால், இந்திய ராணுவம் வெளிநாடுகளில் பல சண்டைகளில் பங்கேற்க, ஸ்டெர்லிங் கட்டணம் பெரிதாகிக் கொண்டே சென்றது.  ஆனால், ஒப்பந்தத்தின் படி, ஸ்டெர்லிங் கட்டணத்தில் இருந்த பணத்தை இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் தான் வெளியெடுக்க முடியும். போரின் காரணமாக பிரிட்டன், இந்தியாவிலிருந்து மென்மேலும் வீரர்களும் பொருட்களும் நிபந்திக்க, இந்திய அரசு அதனைத் திருப்திப்படுத்த, ஸ்டெர்லிங் கட்டணத்தின் மதிப்பிற்கெதிராக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது. இதன் காரணமாக பன்மடங்குக் கூடிய பணவீக்கத்தினால், இந்தியாவில் நடைமுறை வாழ்க்கைக் கடினமானது. இந்தப் பண வீக்கம், 1943-இல் நேர்ந்த வங்காளப் பஞ்சத்தின் தீவிரத்தைக் கூட்டியது (அந்தப் பஞ்சத்தின் மற்றொரு முக்கியக் காரணம், இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், மேல் சர்ச்சில் கொண்டிருந்த இனவெறி).
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், மத்திய கிழக்கில் இத்தாலிய   ராணுவத்துடன் சண்டை முடிந்த பின், இந்திய ராணுவம் பாலைவனச்  சூழலில் தேர்ச்சிப் பெற்றது. பயனுள்ள பயிர்ச்சி மற்றும் தக்கவைப்புக் கொள்கைகள் இல்லாததால், வைஸ்ராய், பிரிட்டனின் ஆணையைப் பின்பற்றி, போரில் நேர்த்தியான சில படைப்பிரிவுகளை புதிதாக சேர்ந்த இந்திய வீரர்களின் பயிற்சிக்கும் ஏகாதிப்பத்திய உடைமைகளின் பாதுகாப்புக்கும் ஒதுக்கினார். இந்திய ராணுவத்தின் போர் தயாரிப்பு நிலைக்கு, பிரிட்டன் தனது நிதி உதவி மூலம் ஆதரிக்காததால், வைஸ்ராய் அந்த வீரர்களின் பணியமர்த்தல், பயிற்சி மற்றும் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொழுது போரின் மற்ற தேவைகளுக்கு ஆதரவு குறையாமல் இருக்க தகுந்த கவனம் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மேலும், ஆரம்பத்தில், மத்திய கிழக்கு ஆணையகமும் (மத்திய கிழக்கை தனது களமாகக் கருதி, இந்திய ராணுவம் அங்குச் சண்டை போட வேண்டும் என்று எதிர்பார்த்தது) இந்திய ராணுவமும் (இந்தியா-வையும் அதை சுற்றி இருந்த மற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது) முன்னுக்குப்பின் முரணாக செயல்பட்டதால் இந்திய ராணுவத்தின் போர் திறன் மத்திய கிழக்கில் நடந்த சண்டைகளில்  குறைந்தே இருந்தது.
நல்ல பயிர்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் தீர்க்கமான போர் யுக்திகளின் மகிமை இந்திய ராணுவத்தின் போர்த் திறனை எந்த அளவுக்கு முன்னேற்றும் என்பதை பர்மா-வில் போர் புரியும் வரை பிரிட்டன் உணரவில்லை.
ஜப்பான் ராணுவத்தின் தாக்குதல்களை இந்திய ராணுவம் தாக்குப்பிடிக்கும் திறனின்  ஏற்றமும் அழிவும், நல்ல நிர்வாகம், ஊட்டச்சத்து மற்றும் பயிற்சியின் விளைவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. ஹாங்காங்க், மலாயா மற்றும் சிங்கப்பூர்-இல் ஜப்பான் ராணுவம் தாக்கிய பொழுது, தேவையான பயிற்சி மற்றும் படைப்பிரிவுகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்திய ராணுவம் அந்த தாக்குதலை எதிர்கொள்ளாமல் சிதறி ஓடியது. நிர்வாகம், பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட பின், கொஹிமா மற்றும் இம்ஃபால் சண்டைகளில் இந்திய ராணுவம் பெருமிதப்படக் கூடிய வகையில் செயல்பட்டன. ஜப்பான் வீரர்களின் சாகும் வரை போராடும் வெறித்தனமானத் தாக்குதல்களை முறியடித்தன.
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், புதிய அனுபவங்களும் நிர்வாகம் மற்றும் சண்டைத் திறன்களும் கற்றுக் கொண்டு பல வீரர்கள் வீடு திரும்பினர். இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுவது போல, நிறைய சண்டை அனுபவம் பெற்ற வீரர்கள் இருந்த மாவட்டங்களில் பின்னர் நடந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவின் போது  சராசரி அளவை விட அதிகமாக இனவெறிக் கொலைகள் நடந்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைப் பற்றிய கருத்து, இரண்டாம் உலகப் போரில் அல்லெய்ஸ் தரப்பில் நேர்ந்த கடும் தோல்விகளினால், சரிய ஆரம்பித்தது. அந்த நோக்கில், சர்ச்சில் மற்றும் ஏனைய பழமைவாதிகள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டன்-இன் ஏகாதிபத்திய உடைமையாக இந்தியா தொடரும் என்ற விருப்பத்தைச் செயல்படுதியிருக்க முடியாது. 1939 -1940-இல், சர்ச்சில் மற்றும் இதர பழமைவாதிகள் அத்தகைய கருத்திற்கு ஏற்றவாறு இந்தியா-வில் மக்களை பிரித்து ஆளும் போக்கினைக் கடைப்பிடித்து வந்தனர். பிரிட்டனின் நிதிப்பற்றாக்குறை மற்றும் மனச் சோர்வினால் போருக்கு முன்னர் இருந்த நிலைமையை அதனால் அடைந்திருக்க முடியாது. பிரிட்டன் வெற்றி பெற்ற அல்லெய்ஸ் அணியில் இருந்தாலும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இதர அரசியல் கட்சிகள் நடத்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிரிட்டன்-இன் சோர்ந்த நிலைமை ஊக்கமாக அமைந்தது. அதே நேரத்தில், பிரிட்டன்-இன் ஏகாதிபத்திய உடைமைகளை அதனிடம் இருந்து பிரிக்க அமெரிக்கா ஆற்றிய பங்கு அலாதியானது. அமெரிக்கா-விடம் பிச்சை எடுக்கும் நிலையில் பிரிட்டன் இருந்ததால், அமெரிக்கா-வின் அழுத்தம் மிகுந்தப் பயனை அளித்தது.
இந்தியா-வை தக்க வைத்துக் கொள்வோம் என்ற பிரிட்டன்-இன் திரிப்புணர்ச்சியின் எதிர்மறைப் பலனாக இந்தியா பாகிஸ்தான் பிரிவின் பின் நடந்த கோர சம்பவங்கள் விளங்கின. தங்களது ஏகாதிபத்தியத்தின் முடிவை எதிர்பார்த்து அதனை கையாளுவதற்கு உரிய மூலோபாயத்தை ஏற்படுத்தாதினால், இந்தியா-வை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்த பொழுது, அதன் விளைவுகளைக் கையாள முடியவில்லை. இவ்வாறு தொலைநோக்கின்றி செயல்பட்டதினால், புதிதாக பதவி ஏற்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நிர்வாகங்களுக்கு பிரிவினையை நல்ல முறையில் கையாள மிகக் குறைய  அவகாசமே கிடைத்தது. பிரிட்டிஷ்-இன் பிரித்து ஆட்சி செய்த கொள்கையின் விளைவாக மதம்(முஸ்லிம் லீக், ஹிந்து மஹாசபா), சாதி (அம்பெத்கார்), மொழி (பெரியார்) மற்றும் ராஜ்ய (ஹைதராபாத், ட்ராவங்கோர்) ரீதியில் அரசியல் செய்தவர்களின் திரிப்புணர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு மத, இன, மொழிச் சார்பற்ற அணுகுமுறையின் ஆதரவு குறைந்தது. இது பிரிட்டிஷ்-இன் ஏகாதிபத்திய ஆட்சிக்குச் சாதகமாக இருந்தாலும், இந்தியா-வின் அரசியல் கட்சிகளுக்குச் சமரசம் செய்து கொள்ளத் தடையாக விளங்கியது. இந்தியா பாகிஸ்தான்-இன் பிரிவின் விபரீத விளைவுகளுக்கு இரண்டு நாடுகளின் முதன்மை அரசியல் கட்சிகளான முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் பொறுப்பாக இருந்தாலும், அந்த பிரிவினையை வித்திட்டதிற்கும் அதில் நிகழ்ந்த அழிவுக்கும் பெரும்பான்மை பொறுப்பு பிரிட்டிஷ்-ஐயே சாரும்.
பாகிஸ்தான்-இல் நிர்வகித்த முஸ்லிம் லீக் கட்சி தனது அரசியல் சக்திக்கு எந்த எதிரிகளும் இல்லை என்பதால், அதன் அன்றைய தலைவர் ஜின்னாவிற்குப் பின் மாற்றுத் தலைவர்களை உருவாக்கவில்லை. காங்கிரஸ் தனது கட்சிக்குள் நிறைய பிரிவுகளைச் சந்தித்ததால் (ஹிந்து மஹாசபா, தனது வெறி நிறைந்த போக்காலும், காந்தியின் சாவிற்கு காரணமாக இருந்ததாலும் தன்னைத் தானே அரசியல் அளவில் அழித்துக் கொண்டது), நிர்வாகம் மற்றும் பிரதிநித்துவ அமைப்புகளின் தலைமைக்கு நேருவிற்குப் பின் மற்றத் தலைவர்களை உருவாக்க முடிந்தது. இந்தியாவில் ராணுவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கீழ் இருப்பதற்கும் பாகிஸ்தானில் ராணுவச் சர்வாதிகாரம் மீண்டும் மீண்டும் தலையெடுப்பதற்கும் இது ஒரு காரணம். இன்று, ஹிந்து தேசியவாதிகள் இந்தியா-வை ஹிந்து நாடாக ஆக்கச் செய்யும் முயற்சிகள், விடுதலை கிடைக்கும் முன் ஜின்னா (முஸ்லிம் லீக்) மற்றும் ஸவர்கார் (ஹிந்து மஹாசபா) அரசியல் விவகாரங்களில் மதச் சார்பற்ற அணுகுமுறையைக் கையாண்ட காங்கிரஸிற்கு எதிராக அணிவகுத்து நின்றனர். இன்றைய காலக்கட்டத்தில், பாகிஸ்தான் தோல்வி அடைந்த ஒரு நாடாக திகழும் பொழுதும், அதே அணுகுமுறையை இந்தியாவில் ஹிந்து தேசியவாதிகள் கடைபிடிப்பது புதிராக உள்ளது.

இந்தப் புத்தகத்தைச் சார்ந்த மற்றக் குறிப்புகள்:
வார் ஆண்ட் பீஸ் இன் மாடர்ன் இந்தியா: ஏ ஸ்ட்ரடீஜிக் ஹிஸ்டரி ஆஃப் தி நேரு ஈயர்ஸ் - ஸ்ரீநாத் ராகவன்
தி ஸோல் ஸ்போக்ஸ்மன்: ஜின்னா, தி முஸ்லிம் லீக் ஆண்ட் தி டிமாண்ட் ஃபார் பாகிஸ்தான் - அயிஷா ஜலால்
நௌ தி ஹெல் வில் ஸ்டார்ட்: ஓண் ஸோல்ஜர்ஸ் ஃப்ளைட் ஃப்ரம் தி க்ரேடஸ்ட் மென்ஹண்ட் ஆஃப் வோர்ல்ட் வார் II - பிரண்டன் கெர்னர்
சர்ச்சில்ஸ் சீக்ரட் வார்: தி பிரிட்டிஷ் எம்பையர் ஆண்ட் தி ரவேஜிங்க் ஆஃப் இந்தியா ட்யூரிங்க் வோர்ல்ட் வார் II - மதுஸ்ரீ முகர்ஜி

No comments: